புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டம்: தமிழகம் புறக்கணிப்பு

By செய்திப்பிரிவு

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை குறித்து மத்தியக் கல்வி அமைச்சர் பொக்ரியால் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

மத்திய அரசு 2020ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் உள்ள பல்வேறு அம்சங்களைத் தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. தமிழகத்தில் கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் கடுமையாக எதிர்த்து இயக்கங்களை நடத்தியது.

3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும், மன்மோகன் சிங் கொண்டு வந்த 8ஆம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் என்பதிலிருந்து பின்வாங்குவதால் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும் என எதிர்த்தனர். அதேபோன்று இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதையும் எதிர்த்தனர்.

தொழில்கள் பயில்வது குறித்த கல்விக் கொள்கையின் திட்டத்தையும் எதிர்த்தனர். கல்வி என்பது சாதாரண மக்களை மேம்படுத்தும் வண்ணம் இல்லாததும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் அம்சங்கள் இருப்பதாகவும் கூறி எதிர்த்தனர். மத்திய அரசு கூட்டிய கூட்டங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் துறைச் செயலர்கள் கலந்துகொண்டனர்.

திமுக அரசு அமைந்ததும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றார். புதிய கல்விக் கொள்கை, இணையவழிக் கல்வி, கரோனா தொற்றுப் பரவல் தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் அனைத்து மாநிலக் கல்விச் செயலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்தியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், இக்கூட்டத்தை அமைச்சர்கள் நிலையில் நடத்த வேண்டும் என்று கேட்டிருந்தார். அமைச்சர்கள் நிலையில் கூட்டத்தை நடத்தும்போது புதிய கல்விக் கொள்கை தொடர்பான தனது கருத்துகளையும், பரிந்துரைகளையும் தெரிவிக்க தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், தமிழக அரசின் இந்தக் கருத்துக்கு மத்திய அரசு பதிலேதும் அளிக்காமல் கூட்டத்தை திட்டமிட்டபடி இன்று நடத்தியது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்தியக் கல்வித்துறை அமைச்சகம் மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது.

ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கையை எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாது என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையை மத்திய அரசு ஏற்காத நிலையில், தற்போது மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புறக்கணிப்பு ஏன் என்பது குறித்து தமிழக அரசு காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்