முழு ஊரடங்கின் 2-வது நாள்; திருச்சி சாலைகளில் அதிகரித்த வாகனப் போக்குவரத்து: கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

By ஜெ.ஞானசேகர்

முழு ஊரடங்கின் 2-வது நாளான இன்று திருச்சி மாநகரில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மே 10-ம் தேதி (நேற்று) முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.

பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களின் இயக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் தேவைக்காக மளிகை, காய் கனி, இறைச்சிக் கடைகள் பிற்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கின் முதல் நாளான நேற்று இருசக்கர வாகனப் போக்குவரத்து அதிகமாகவும், கார்கள் குறைவாகவும் காணப்பட்டன. ஆனால், பிற்பகல் 1 மணிக்குப் பிறகு போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

ஆனால், முழு ஊரடங்கின் 2-வது நாளான இன்று (மே 11) சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் இருந்தது. முழு ஊரடங்கு அமலில் இருப்பதே தெரியாத அளவுக்கு மாநகரின் பல்வேறு சாலைகளிலும் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் அதிக அளவில் இயங்கின.

வாகனப் போக்குவரத்து அதிக அளவில் இருந்ததையடுத்து, போலீஸார் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து அனைத்து வாகன ஓட்டிகளையும் நிறுத்தி விசாரித்து தேவையின்றி வெளியே வந்ததாகக் கண்டறிந்தவர்களை வழக்குப் பதிவு செய்யாமல் எச்சரித்து மட்டும் அனுப்பினர். முகக்கவசம் அணியாமலும், அதிக எண்ணிக்கையில் ஆட்கள் ஏற்றி வந்த இலகுரக வாகனங்களுக்கும் மட்டும் போலீஸார் அபராதம் விதித்தனர்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "திருச்சி மாவட்டத்தில் மே 10-ம் தேதி மட்டும் 869 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,667 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு அமலில் இருப்பதே தெரியாத அளவுக்கு திருச்சி மாநகர சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. போலீஸார் ஊரடங்கு விதிமீறல் வழக்குப் பதிவு செய்யாமல், எச்சரித்து மட்டும் அனுப்புவதாலேயே மக்கள் அலட்சியமாக உள்ளனர்.

இன்றளவும் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோர் இருக்கும் நிலையில், போலீஸார் எச்சரித்து விடாமல், ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதுதான் சரியாக இருக்கும். அப்போதுதான், திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்" என்றனர்.

இது தொடர்பாக, போலீஸார் கூறுகையில், "முகக்கவசம் அணியாமல் வருவோருக்கும் மற்றும் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனங்கள் பறிமுதல், ஊரடங்கு விதிமீறல் வழக்குப் பதிவு செய்வது ஆகிய நடவடிக்கைகள் குறித்து உரிய அறிவுறுத்தல் வரப் பெறவில்லை" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்