சென்னை மாநகராட்சி மயானங்களுக்கு வரும் சடலங்கள் அதிகரிப்பு; காலியாக இருக்கும் மயானங்களை அறிய முடியாமல் மக்கள் அவதி: ஆன்லைன் மயான முன்பதிவு, 24 மணி நேர சேவை வழங்க கோரிக்கை

By ச.கார்த்திகேயன்

சென்னையில் மயானங்களுக்கு வரும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றைக் கொண்டுசெல்ல காலியாக இருக்கும் மயானங்கள் குறித்த விவரங்களை அறிய முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

சென்னையில் கடந்த 5 நாட்களில் மட்டும் கரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 295 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்காக வரும் வழியிலும், மருத்துவமனை கிடைக்காமல் சுற்றி வந்து இறப்போர், கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாமல் வீடுகளில் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 68 மயானங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை நவீனப்படுத்தி மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இங்குகாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.

தற்போது இயற்கை மரணங்களோடு சேர்ந்து கரோனா மரணங்களும் ஏற்பட்டு வருவதால், மாநகராட்சி மயானங்களுக்கு வரும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக பெசன்ட் நகர், வேலங்காடு, அரும்பாக்கம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மயானங்களில் சடலங்கள் அதிகமாக வருகின்றன. அப்பகுதியை சேர்ந்த மக்களின் உறவினர்கள் கரோனா தொற்றால் இறந்தாலோ, இயற்கை மரணம் அடைந்தாலோ, எளிதாக மயானங்களுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய முடியவில்லை. ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றை எரிக்கவே நேரமில்லை எனவும் தகன மேடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் காலத்தோடு சடலங்களை தகனம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சடலத்தோடு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:

சடலங்களை அடக்கம் செய்ய எங்களுக்குத் தெரிந்த மயானங்களுக்கு சென்றால் ஏற்கெனவே ஏராளமான சடலங்கள் காத்திருப்பில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். காலியாக இருக்கும் மயானங்கள் எங்கிருக்கிறது என்ற விவரத்தை அறிய முடியவில்லை. ஒவ்வொரு மயானமாக நேரில் சென்று விசாரிக்க வேண்டியுள்ளது. டெல்லியை போன்று தமிழகமும் மாறிவிட்டதாக தகவல் பரவக்கூடாது என்பதற்காக விறகுகளைக் கொண்டு எரிக்கவும் மாநகராட்சி ஏற்பாடு செய்யவில்லை.

அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் பற்றிய விவரங்களை அறிய இணையதளம் வெளியிட்டது போல், காலியாக இருக்கும் மயானங்கள் பற்றிய விவரம் அறியவும், சடலங்களை தகனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யவும் மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும். 24 மணி நேரமும் சடலங்களை தகனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். மரக்கட்டைகளைக் கொண்டு திறந்த வெளியில் எரிக்கவோ, புதைக்கவோ ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் இருந்து கரோனா சிகிச்சைக்காக சென்னை வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் சென்னையில் கரோனா மரணங்கள் அதிகரிக்கின்றன. கரோனா தொற்று பாதித்தசடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சென்னையிலேயே தகனம் வேண்டி இருப்பதால், மயானங்களுக்கு சடலங்கள் வருவதும் அதிகரித்துள்ளது. பலர் குறிப்பிட்ட சில மாயனங்களுக்கே அதிகமாக செல்கின்றனர். மயானங்களை 24 மணி நேரம் இயக்க முடியாது. இப்பிரச்சினையை சமாளிக்க, மாநகராட்சி சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. அக்குழு மருத்துவமனைகளுடன் இணைந்து, காலியாக உள்ள மயானங்களுக்கு மருத்துவமனையில் இருந்து நேரடியாக சடலங்களை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளது. காலியாக உள்ள மயானங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்