கொற்கை அகழாய்வில் 2800 ஆண்டு பழமையான செங்கல் கட்டுமானம், சங்கு அறுக்கும் இடம் கண்டுபிடிப்பு: தொல்லியல் ஆர்வலர்கள் உற்சாகம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுமார் 2800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் மற்றும் சங்கு அறுக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று இடங்களில் அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொற்கையில் கடந்த 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் ஏற்கெனவே தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளது.

அந்த அகழாய்வு பணி தான் தமிழக தொல்லியல் துறை உருவான பின்னர் செய்த முதல் அகழாய்வுப் பணியாகும். அந்த அகழாய்வின்போது 2800 பழமையானது கொற்கை நகரம் என்பது உறுதியானது. இங்கு துறைமுகம் இருந்தாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி, இறக்குமதி நடந்தாகவும், பாண்டிய மன்னரின் தலைநகராக இவ்விடம் விளங்கியது எனவும் அறிவிக்கப்பட்டது.

பண்டைய துறைமுக நகரமான கொற்கையில் 52 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தமிழக தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையில், அகழாய்வாளர்கள் ஆசைத்தம்பி, காளிஸ்வரன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பணியாளர்களை இங்கு பணியாற்றி வருகின்றனர். இந்த அகழாய்வு பணிக்காக கொற்கை பகுதியில் 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொற்கையில் நடைபெறும் அகழாய்வில் 2800 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமானம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தில் உள்ள செங்கல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் உள்ளன.

அதேபோல் 2800 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியில் சங்கறுக்கும் தொழில் நடந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமான ஒரு குழியில் சங்குகள் முழுமையாகவும், அறுத்த நிலையிலும் காணப்படுகின்றன.

மேலும் அதே குழியில் சங்குகள் அறுத்த பின்னர் தீட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் பல வடிவங்களில் கிடைத்துள்ளன. மேலும் இந்த அகழாய்வு குழிகளில் சங்குகள், சங்கு வளையல் துண்டுகள், இரும்பு உருக்கு துண்டுகள், கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் குறீயிடுகள் என ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த அகழாய்வு பணியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கொற்கை துறைமுகம் மிகப்பெரிய வியாபார தலமாக இருந்துள்ளது. முன்பு நடந்த ஆய்வில் கிடைத்த பொருள்களை தென்காசி மாவட்டம் குற்றாலம் வைப்பறையில் காட்சிக்கு வைத்தனர். தற்போது இங்கு கிடைக்கும் பொருள்களை சேகரித்து, பழைய பொருள்களையும் கொண்டு வந்து இந்த பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாட்டு தமிழ் அறிஞர் கால்டுவெல் இந்த பகுதியில் அகழாய்வு செய்தபோது தெரு முழுவதும் சங்குகளும், வெளிநாட்டு நாணயங்களும் நடந்து செல்லும் இடங்களில் எல்லாம் கிடைத்தன என எழுதியுள்ளார். தற்போதும் அகழாய்வின் போது நிறைய சங்குகள் ஆங்காங்கே கிடைக்கின்றன. கொற்கையின் முழுமையான அகழாய்வு முடிவு வெளியாகும் போது, உலகமே தமிழனின் பெருமையை சிறப்பாக பேசும் காலம் வரும். எனவே, கொற்கை அகழாய்வை தொல்லியல் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, கொற்கையில் மிகவும் பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இதில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் மஞ்சள் அடித்து மறைக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலை பழமை மாறாமல் கல்வெட்டுகளை வெளியே தெரியும் படி சீரமைக்க வேண்டும்.

இதுபோல் கொற்கை துறைமுகம் இருந்த இடத்தில் மாதிரி துறைமுகம் அமைத்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது இதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்பின் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. மீண்டும் கொற்கை பகுதியை சிறப்பாக காட்சிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

உலகம்

4 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்