சென்னை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இலவசமாக பஸ் வசதி செய்வது தொடர்பாக இன்று (4.12.2015) மாலைக்குள் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் கொண்ட அமர்வில், திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் முத்துக்கிருஷ்ணன், ராஜகோபால் ஆகியோர் ஆஜராகி, ‘சென்னை மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள தென் மாவட்ட மக்கள் உடமைகளை இழந்து, சொந்த ஊர்களுக்கு செல்ல வழியில்லாமல் தவிக்கின்றனர்.
அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக அரசு இலவசமாக பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
அப்போது நீதிமன்றத்தில் இருந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியனிடம், இது தொடர்பாக அரசிடம் தகவல் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு நீதிபதிகள் கூறினர்.
இப்பிரச்சினை குறித்து மதியம் நடைபெற்ற விசாரணையின் போது, இலவசமாக பஸ்கள் இயக்குவது தொடர்பாக அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பேக்ஸ் மூலமாகவும் அரசுக்கும், போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக இன்று மாலையில் உயர் மட்டக்குழு கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெறுகிறது.
அந்தக் கூட்டத்தில் சென்னையில் மழை வெள்ளப் பாதிப்புக்கு ஆளாகி சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்பும் பொதுமக்களுக்காக இலவசமாக பஸ்கள் இயக்கப்படுவது தொடர்பாகவும் விவாதித்து உரிய முடிவெடுக்குமாறு கூறியிருப்பதாக கே.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னை வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இலவச பஸ் போக்குவரத்து தொடங்குவது குறித்து இன்று (4.12.2015) மாலைக்குள் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago