தமிழகத்தில் அரியர் தேர்வுகள் நடத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

By ஆர்.பாலசரவணக்குமார்

தமிழகத்தில் அரியர் தேர்வுகள் நடத்தப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மே மாதம் முதல் ஆன்லைன் மூலமாகத் தேர்வுகள் நடத்த வாய்ப்புள்ளதாகத் தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், அரியர் தேர்வுக்குக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குமார் ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் இந்த அரசாணைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமும், சட்டப்படிப்பு, விவசாயப் படிப்பு, மருத்துவப் படிப்பு, ஆசிரியர் படிப்புகளை நிர்வகிக்கும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின் அடிப்படையிலேயே, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல்கலைக்கழக மானியக்குழு தரப்பு, 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் ஜூலை மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட விதிகளில், எளிய முறையில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தல் வழங்கி, விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகவும், தேர்வுகள் நடத்த வேண்டாம் என்று தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது எனத் தெரிவித்தனர்.

மேலும், தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக, எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறித்தும், எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும், முழுமையான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் கலந்து பேசி ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த வழக்கு இன்று (ஏப்.15) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ததில், தற்போது அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆஃப்லைன் மூலமாகவோ அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்வு நடத்தும் தேதி குறித்துப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆலோசனை பெற்று முடிவு செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், ஏற்கெனவே தேர்வு எழுதிய மாணவர்களுக்குச் சான்றிதழ்களை விரைந்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இந்த நடைமுறைகளை 8 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்