இதோ இக்குவலயத்தை நிழலிடஆரம்பித்திருக்கும் ரமலான் மாதம் இஸ்லாமிய சரித்திரத்திலும் ஓர் தனிப்பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நூற்றாண்டுகளாக நேரியதோர் மார்க்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மானிட கோடிகளுக்கு இறுதி நபி, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தெய்வீக வழி முறைகளை ஒழுகி நடக்கும் சந்தர்ப்பத்தை வாய்க்கச் செய்ததும் இம் மாதமே. புனித ரமலானின் மகிமையை இறைவன் தன் திருவேதத்திலே எடுத்தியம்புகிறான் இவ்வாறு:
ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ மிக்க) மாதமென்றால்; அதில்தான் ‘குர்ஆன்’ எனும் (பரிசுத்த - வேதம்) அருளப்பெற்றது. அது மனிதர்களுக்கு நேர்வழியாகவும் (நன்மை தீமைகள் யாவை யெனப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் இருக்கிறது - (2:185). திருக்குர்ஆன் இறங்கியமாதமென்றால் அது எத்தகைய மகத்துவமிக்க மாதமாகும் என்பதை சொல்லவும் வேண்டுமோ!
இம்மாத மாண்பைப் பற்றி அண்ணலார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அறவுரைகளில் ஒன்றை ஆய்வோம். “ரமலான் மாத ஆரம்ப இரவு தோன்றிவிட்டாலே, ஷைத்தான்களும் மூர்க்கஜின்களும் சிறையிடப்பட்டு விடுகின்றனர். நரகவாயில் அடைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றும் திறக்கப்படுவதில்லை. மேலும் சொர்க்க வாயிற்படிகள் திறக்கப்படுகின்றன; அவற்றிலொன்றும் அடைக்கப்படுவதில்லை, பின்னர் வானவர்கள் (மானிடனை நோக்கி) அறைகூவிஅழைக்கின்றனர்: நன்மையைத் தேடுபவனே! (நன்மை செய்வதில்) முன்னேறிச்செல்! துர்க்கிரியை புரிபவனே! (இன்றிலிருந்து பாபமேதும் செய்யாமல்) உன்னை நீ நரக நெருப்பிலிருந்து விடுதலைப் பெறலாம். இவ்வாறு ஒவ்வொரு இரவும் அழைக்கப்படுகிறது.” (திர்மதி).
புனித ரமலான் மாத மகத்துவத்துக்கு இவற்றைவிட வேறு என்ன சான்றுகள் வேண்டும்.
நோன்பின் மாண்பு
ரமலான் மாதத்தை அடையப் பெறும்முஸ்லிம்களை நோக்கி இறைவன் ஆணையிடுகிறான் இவ்வாறு: ‘‘ஆகவே உங்களின் எவன் அம்மாதத்தை அடைகிறோரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்’’ - (2:185).
ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிடும் இறைவன் அதைவலியுறுத்தி, ‘‘(எத்தகைய காரணங்களும் காட்டி நீங்கள் தப்பிக்க முயலாமல்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். (இந்தஉண்மையை) நீங்கள் அறிவுடையோர் களாயிருந்தால் (புரிந்துகொள்வீர்கள்) (2:184) என்று கூறியிருக்கிறான்.
இறைவனின் திருத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மொழிந்த வாக்கியங்களில் சிலவற்றை காண்போம். ஹலரத்அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘‘மனிதன் புரியும் நற்கிரியைக்காக பத்திலிருந்து 700 வரை இரட்டிப்பாக நற்கூலி கிடைக்கிறது; ஆனால் அல்லாஹ் கூறுகிறான்: நோன்பைத் தவிர, ஏனெனில் அதுஎனக்கே சொந்தம்; அதற்கு நானாகவே கூலி கொடுப்பேன். காரணம் (நோன்பு நோற்கும்) அவன் எனக்காகவே தன் மனைவியோடு புணர்வதை; உண்பதை விட்டிருக்கிறான் என்றும் நோன்பு நோற்பவர்களுக்கு இரு (முறை) மகிழ்ச்சிகள்(அடையும் வாய்ப்பு) இருக்கின்றன. 1-வது நோன்பு திறக்கும்போதும், 2-வதுமறுமையில் தனது இறைவனை தரிசிக்கும்போதும் தோன்றும் மகிழ்ச்சிகளாகும். நோன்பு (உலகில் பாபங்களையும், நோய்களையும், ஷைத்தானிய எதிர்ப்புகளையும், மறுமையில் நரகவேதனையையும் தடுக்கக்கூடிய) கேடயமாக திகழ்கிறது!” என்று இறைவனின் தூதர்முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி, முஸ்லிம்).
நோன்பின் நோக்கம்
‘‘விசுவாசிகளே! நீங்கள் பரிசுத்தவான்களாக வேண்டியே முந்தைய (சமூகத்த)வர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி இறைவன் நோன்பின் நோக்கத்தை தெளிவுபடுத்தி இருக்கிறான் தன் வேதத்திலே.
‘தராவீஹ்’ தொழுகை
ரமலான் மாத பகல் காலங்களில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கி இருப்பதைப் போன்றே ரமலான்மாத இரவுகளில் நின்று வணங்கும்படி எம் பெருமானார் (ஸல்) அவர்கள் பணித்திருக்கிறார்கள். ரமலான் மாதம் இரவில்தொழ வேண்டிய தொழுகைக்குத்தான் ‘தராவீஹ்’ எனப்படும். இறைவனுக்காக பசித்திருந்து அவன் அருளுக்கு உரியவனாகும் முஸ்லிம் இரவில் விழித்திருந்து அவன் அருளையும் அனுக்கிரகத்தையும் பாபமன்னிப்பையும் பெறலாம் என்று அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
முஸ்லிமாக இருக்க விரும்புபவன், மறதியாலோ, லோக மாய்கையில் மூழ்கியோ மார்க்கத்தை மறந்துபாபங்கள் இழைத்துவிடினும் உடனடியாக அதற்கான பரிகாரத்தை தேடி அலைவான். பரிகாரத்துக்கான சந்தர்ப்பம் கிடைத்தபின் அதை துரிதமாக பயன்படுத்திக் கொள்வான். அதன்பின்னர், தன்னை அவன் தூய்மைப்படுத்திக் கொள்வான். எனவே நாம் ரமலானை வரவேற்போம். ரஹமத்தை என்றும் பெறுவோம்.
வருக ரமலானே வருக!!
கட்டுரையாளர்: ‘ரஹ்மத்’ ஆசிரியர்,
தலைவர், நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
34 mins ago
தமிழகம்
50 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago