தேர்தலில் 3 அல்லது 4 சீட்டுகள் தேவையில்லை. ஒட்டுமொத்த மாற்றத்துக்காக இந்த நாடே எனக்கு தேவை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில்போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
நாட்டில் ஊழல் கட்சிகள், மதவாத கட்சிகளுக்கு எதிராக புரட்சிகரமான அரசியல் போரினை நாங்கள் தொடங்கியுள்ளோம். நாங்கள் விரும்பும் மாற்றத்தை எங்களிடம் இருந்தே தொடங்கியிருக்கிறோம். அநீதிகளின் கட்டமைப்பாக சமூகம் இருப்பதால் ஊழலைஒழிக்க முடியவில்லை. அதனால்தான் 3 அல்லது 4 சீட்டுகளுக்காக இல்லாமல், ஒட்டுமொத்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு எனக்கு இந்த நாடு தேவை. தற்காலிக வெற்றிக்கு நிரந்தர வெற்றியைப் பலி கொடுக்க நான் விரும்பவில்லை.
அனைத்து உயிர்களுக்கான அரசியல் செய்யவே நாங்கள் வந்திருக்கிறோம். தமிழகத்தில் லாபம் ஈட்டும் தொழிலாக, குடும்பத்தின் சொந்த சொத்தாக அரசியல் மாற்றப்பட்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சி அவற்றுக்கு எதிர்திசையில் பயணிக்கிறது. புதியதொரு தேசம் செய்வோம் என்ற முழக்கத்துடன் பயணிக்கிறோம்.
வேட்பாளர்கள் தேர்வில் ஆண், பெண்ணுக்கு சமஉரிமை அளிப்பது பிறவிக் கடமை. சமூகப் பொறுப்பு. ஆணும், பெண்ணும் சமம் என்பதே எங்கள் கொள்கை. எங்கள் கொள்கையை ஏற்றுக்கொண்டதால்தான், நாடாளுமன்றத்தில் 17 லட்சம் பேர் எங்களுக்கு வாக்களித்தனர். இத்தேர்தலில் எங்களை வெற்றி பெறச் செய்தால் 5 ஆண்டுகளில் தமிழகத்தை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் சாதனை படைப்போம். தரமான, இலவச கல்வி, மருத்துவம் அளிப்போம். பல கோடி பனைத்திட்டம், வேளாண் பணிகள் அனைத்தும் அரசுப் பணிகளாக அறிவிக்கப்படும்.
டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதற்குப் பதிலாக மக்களுக்கு பனம்பால், தென்னம்பால், மூலிகைச் சாறு வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவோம். உயிரைக் கொடுத்தாவது விவசாயிகளை நாங்கள் வாழ வைப்போம். அரசுப் பள்ளிகள், கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் படையெடுக்கும் நிலை உருவாக்கப்படும்.
எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்,முதல்வர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும். அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்படும்.
சுற்றுச்சூழலைப் பாதிக்காததொழிற்சாலைகள் தொடங்கப்படும். தமிழ் வழியில் படித்தால்தான் வேலை என்று நிலை நிச்சயம் கொண்டு வரப்படும். இவ்வாறு சீமான் பேசினார்.
அதையடுத்து 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை சீமான் வாசித்தார். அவர் சென்னை திருவொற்றியூரில் போட்டியிடுகிறார். இதேபோல்,கன்னியாகுமரி மக்களவைக்கான இடைத்தேர்தலிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
11 hours ago