சூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை: முடிவு எடுக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை 

By செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க, 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்கு தடை கோரியும், சூரப்பா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
சூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

“கடந்த 2018-ம் ஆண்டு துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போதும், 2020 வரை சூரப்பாவுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அண்ணா பல்கலைகழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததாலும், இடஒதுக்கீடு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்து காரணமாகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தரை நியமிக்க அதிகாரம் கொண்ட ஆளுநருக்கு தான், நீக்கவும் அதிகாரம் உள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதாலும், அரசுக்கு அடிபணிய மறுத்ததாலும் உள்நோக்கத்துடன் விசாரண ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம், சூரப்பாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே மாதம் வரை நீட்டித்துள்ளனர். பணிக்காலம் முடிந்த பின் எப்படி நீக்க முடியும்? 1000 ஆவணங்கள், 100 சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர், இது சூரப்பாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதால், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்”. எனக் கோரிக்கை விடுத்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “மனுதாரர் கூறுவது போல், அரியர் தேர்வு ரத்துக்கு எதிர்ப்பு, சீர்மிகு கல்வி நிறுவனமாக அறிவிக்க முயற்சித்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடவில்லை. விசாரணையை சந்திக்க அவர் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்? விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கெனவே முன்னாள் துணைவேந்தர்கள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை ஆணையம், அறிக்கை அளித்தாலும், அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும்”. எனக்கோரினார்.

பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், துணைவேந்தருக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைத்தது குறித்து ஆளுநர் வேதனை தெரிவித்ததாகக் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன், கல்வி நிறுவனத்தின் நற்பெயரை கருத்தில் கொண்டு, சுமூக தீர்வு காண அறிவுறுத்தினார், விசாரணை அறிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தமிழக அரசுக்கு இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தார்.

மேலும், மனுவுக்கு மார்ச் 15-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்