சென்னையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன: 16 தொகுதிகளில் தேர்தல் பணி தீவிரம் 

By செய்திப்பிரிவு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. சென்னை உட்பட்ட 16 தொகுதிகளில் தேர்தலை நடத்துவது குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி பிரகாஷ் தலைமையில் காவல் ஆணையர், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் - 2021 வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக பிப்.26 அன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர்/ ஆணையர் பிரகாஷ், மாநகரக் காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் இன்று ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

தொடர்ந்து, மாவட்டத் தேர்தல் அலுவலர்/ஆணையர், மாநகரக் காவல் ஆணையாளர் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ள 48 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (SST), 48 பறக்கும் படை குழுக்கள் (FST), 16 வீடியோ கண்காணிப்புக் குழுக்களின் (VST) செயல்பாட்டினைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாவட்டத் தேர்தல் அலுவலர்/ ஆணையாளர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

''இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் 2021 குறித்த தேர்தல் அறிவிப்பினைக் கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ளவாறு அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் ஆரம்பம் - மார்ச் 12

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் - மார்ச் 19

வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 20

மனுக்கள் திரும்பப்பெறுதல் - மார்ச் 22

இறுதி வேட்பாளர் பட்டியல் - மார்ச் 22

வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 6

வாக்கு எண்ணிக்கை நாள்- மே 2

மேலும், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் அனைத்தும் 24 மணி நேரத்திற்குள் அழிக்கப்படும். பொதுத்துறை கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஓவியங்கள் மற்றும் கொடிகள் 48 மணி நேரத்திற்குள் அழிக்கப்படும்.

தனியார் கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள சுவரொட்டிகள் மற்றும் ஓவியங்களை 72 மணி நேரத்திற்குள் அழிக்கப்படும். இப்பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று மாலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021-க்கு சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 16 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 16 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 16 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தின் மொத்த வாக்குச்சாவடிகள் 5,911 ஆகும். இதில் 2,157 துணை வாக்குச்சாவடிகள் அடங்கும். இது கடந்த தேர்தலில் இருந்த 45% கூடுதலாகும். சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் 29,000 வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட 40,000க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் புதிய நடைமுறையாக மாற்றுத்திறனாளிகளுக்கும், 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் தபால் வாக்குகள் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்று பாதித்த நபர்கள் மற்றும் அறிகுறிகளுடன் உள்ள நபர்களுக்கும் தபால் வாக்கு வழங்க இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் மேற்படி பறக்கும் படை மற்றும் குழுக்களைக் கண்காணிப்பதற்காக ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அக்கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1950-ல் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒருங்கிணைப்பாளர்கள், 17 அலுவலர்கள் மேற்படி பணிகளைச் சீராகக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, இந்தத் தேர்தலைச் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்திட ஒத்துழைப்பு நல்க வேண்டும்''.

இவ்வாறு பிரகாஷ் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

5 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

3 mins ago

சினிமா

21 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

15 mins ago

சினிமா

26 mins ago

சினிமா

29 mins ago

வலைஞர் பக்கம்

33 mins ago

சினிமா

38 mins ago

சினிமா

43 mins ago

மேலும்