திமுக ஒரு இந்து விரோதக் கட்சி என்று சேலத்தில் நடந்த பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில், பேசிய அக்கட்சியின் இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, தெரிவித்தார்.
தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாநில மாநாடு சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. தமிழக சட்டப்பேரவை கட்டிட வடிவிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தலைமை வகித்தார்.
இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, பாஜக மாநிலத் தலைவர் முருகன், துணைத் தலைவர்கள் துரைசாமி, அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பொதுச் செயலாளர்கள் ராகவன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
விழாவில் பேசிய தேஜஸ்வி சூர்யா கூறியதாவது:
தமிழ்நாடு ஒரு புனித மாநிலம். தமிழகத்தின் வரலாறு மிகவும் தொன்மையானது. தமிழ் மொழியின் தொன்மைக்கு தலை வணங்குகிறேன். தமிழ் மண்ணில் ஆளுமைமிக்க அரசர்கள் பலர் ஆண்டுள்ளனர்.
தமிழக இளைஞர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியமானது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கான சவால் திமுக வடிவில் உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளை, தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் கட்சியாக திமுக இல்லை. திமுக தமிழர்கள் விரோதக் கட்சி. ஏன் என்பதற்கு சில விளக்கங்களை நான் கூறுகிறேன். ஜனநாயகத்துக்கு திமுகவினர் ஒரு விளக்கம் வைத்திருக்கின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி ஜனநாயகம் என்பது குடும்பத்தால், குடும்பத்துக்காக உருவாக்கப்பட்டது. இங்கே இன்று திரண்டிருக்கும் இளைஞக்ரள் யாரும் திமுகவைப் போல் குடும்ப அரசியல் பின்னணி கொண்டவர்கள் இல்லை. தமிழகத்தில் உண்மையான ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும். பாஜகவில் மட்டும் தான் சாதாரணத் தொண்டர்கள் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், ஏன் அமைச்சர்களாகக் கூட ஆக முடியும். குடும்பம் உங்கள் கட்சி, கட்சியே எங்களின் குடும்பம் என்ற கொள்கையில் நாங்கள் தொண்டாற்றுகிறோம். இதுவே பாஜகவின் தாரக மந்திரம்.
திமுக தமிழர் விரோதக் கட்சி என்று நான் கூறுவதற்கு இன்னொரு காரணம் அதன் இந்து விரோதப் போக்கு. தமிழக புண்ணிய பூமி. இங்குதான் அதிகளவிலான கோயில்கள் உள்ளன. இங்கு வாழும் ஒவ்வொரு தமிழரும் பெருமித இந்து. ஆனால், திமுக இந்து விரோதப் போக்கைக் கடைபிடிக்கிறது. மிகவும் மோசமான இந்து விரோதக் கொள்கையைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆகையால் நாம் திமுகவைத் தோற்கடிக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கும் வரும் போதெல்லாம் கோயில்கள் நிலங்களை அபகரிப்பது நடக்கும். திமுக ஆட்சியில் இந்து மத விரோத அறிக்கைகளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், இப்போது தேர்தல் நெருங்குவதால் இந்து மதத்தை ஆதரிப்பதுபோல் நடிக்கிறார்கள்.
பாஜக இந்திக் கட்சி என திமுக பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறது. அப்படி, பாஜக இந்திக் கட்சியாக இருந்திருந்தால் கர்நாடகத்தைச் சேர்ந்த நான், கன்னடம் பேசும் நான் பாஜக இளைஞரணி தேசியத் தலைவராகியிருக்க முடியுமா? இல்லை தமிழகத்தில் பிறந்து தமிழ் பேசும் வானதி ஸ்ரீனிவாசன் தான் பாஜக மகளிரணி தேசியத் தலைவராகியிருக்க முடியுமா? பாஜக பிராந்திய மொழிகளுக்கான கட்சி. பிராந்திய மொழி நன்றாக இருக்க வேண்டுமென்றால் இந்துத்துவம் வலுவாக இருக்க வேண்டும்.
தமிழக இளைஞர்கள் எங்கு சென்றாலும் வெற்றியுடன் திரும்புவர். அதற்கு சமீபத்திய உதாரணம் உங்கள் ஊரில் இளம் கிரிக்கெட் வீரர் நடராஜன். தமிழகத்தில் ஊழலற்றி ஆட்சி அமைய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் அது நடக்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
31 mins ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago