புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இல்லம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முதல்வர் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. நீதிமன்றத்தை அரசியல் களமாக பயன்படுத்தக் கூடாது என மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஆர்.ஞானசேகரன் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
புதுச்சேரியில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்தக் கோரி தலைமை தபால் நிலையம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி துணை நிலை ஆளுநரிடம் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனு அளித்தேன். இதுதொடர்பாக காவல்துறையை அணுக அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கிராண்ட் பஜார் காவல் நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கோரி நான் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், லோக் ஆயுக்தாவை அமல்படுத்த வலியுறுத்தி அனுமதியின்றி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இல்லமான ராஜ் நிவாஸ் முன்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கைக்காக முதல்வர் நாராயணசாமி இல்லம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட என் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். ஆனால், ஆளுநர் இல்லம் முன்பாக அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முதல்வர் உள்ளிட்டோர் மீது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது சட்ட விரோதமானது. எனவே, ஆளுநர் இல்லம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு அரசியல் ரீதியாக உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது.
அரசியல் விவகாரங்களை நீதிமன்றத்தின் வெளியே வைத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தை அரசியல் களமாக பயன்படுத்தக் கூடாது’’ என மனுதாரருக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
14 mins ago
விளையாட்டு
6 mins ago
இந்தியா
14 mins ago
தமிழகம்
39 mins ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
ஜோதிடம்
6 hours ago