காரைக்கால் மாவட்டத்திலிருந்து 10 படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் குறித்த தகவல் இன்று மாலை வரை கிடைக்கவில்லை.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை (நவ.25) காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் மிக பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் இன்னும் ஊர் திரும்பவில்லை. சிலரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
"நிவர் புயல் குறித்த தகவலும், மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் 22-ம் தேதிதான் மீன்வளத்துறை மூலம் கிடைக்கப் பெற்றோம். உடனடியாக இனிமேல் யாருக்கும் தொழிலுக்குச் செல்லக் கூடாது என்றும், ஏற்கெனவே சென்றவர்களை உடனடியாகக் கரை திரும்புமாறும் சொல்லிவிட்டோம்.
ஒரு வாரம் முன்னரே தகவல் சொல்லப்பட்டிருந்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் இருந்திருப்பார்கள். தாமதமாக எங்களுக்குத் தகவல் சொல்லப்பட்டதால் 21-ம் தேதி வரை மீனவர்கள் தொழிலுக்குச் சென்றுள்ளனர்" என்று மீனவப் பஞ்சாயத்தார்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் ஆர்.கவியரசன் கூறுகையில், "24 படகுகளில் சென்ற மீனவர்கள் கடலில் இருந்த நிலையில், ஒவ்வொரு படகில் உள்ளோரையும் தொடர்ந்து தொடர்புகொண்டு பேசி வருகிறோம். 14 படகுகளில் உள்ள மீனவர்களைத் தொடர்புகொண்டு பேச முடிந்தது. தாங்கள் இருக்கும் கடல் பகுதியில் இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லை. தொடர்ந்து பாதுகாப்பாக அருகில் உள்ள கரைப்பகுதிக்குச் சென்றுவிடுவோம் எனக் கூறினர்.
10 படகுகளில் உள்ளோரை மட்டும் இன்று மாலை வரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் கோடியக்கரை பகுதியில் இருப்பதாகத் தெரிய வருகிறது. தொடர்ந்து அவர்களைத் தொடர்புகொள்ள முயன்று கொண்டிருக்கிறோம். ஒரு படகில் 7 பேர் வரை சென்றிருக்கக் கூடும்" என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
வலைஞர் பக்கம்
11 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
58 mins ago
சினிமா
17 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago