ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி; முதல்வரோ, அதிமுக அமைச்சர்களோ வாய் திறக்காதது ஏன்? - ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

தமிழகத்திற்கு எதிரான ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் நடுங்கி ஒடுங்கி மத்திய பாஜக அரசுக்குப் பயந்து அதிமுக ஆட்சியாளர்கள் நிற்கிறார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மறைந்த நாகை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் டி.சத்தியேந்திரனின் திருவுருவப் படத்தை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 19), காணொலி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

"இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடக்கிறது. அரசு டெண்டர்களை அமைச்சர்கள் 'பினாமி' பெயரில் எடுக்கிறார்கள். இல்லையென்றால் அண்ணன், தம்பி, உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியே தனது சம்பந்திக்கு, தனது துறையின் கான்ட்ராக்டுகளைக் கொடுக்கிறார். கேட்டால், அமைச்சரின் அண்ணன் டெண்டர் எடுக்கக் கூடாதா? முதல்வரின் சம்பந்தி டெண்டர் எடுப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள்.

இன்னும் ஒரே ஒரு கேள்வியைத்தான் முதல்வர் பழனிசாமி பத்திரிகையாளர்களைப் பார்த்தோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகிய என்னைப் பார்த்தோ கேட்கவில்லை. அது என்ன கேள்வி தெரியுமா? ஊழல் செய்தால் என்ன தவறு? அரசுப் பணத்தைக் கொள்ளையடித்தால் என்ன தவறு? இதை மட்டும்தான் இன்னும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை.

இப்போது போகிற போக்கைப் பார்த்தால், பழனிசாமி பதவி போய் விடுமே என்று எரி்சசல்படுவதைப் பார்த்தால், அதைக் கூடக் கேட்டாலும் கேட்பார்.

அந்த அளவுக்கு அரசுப் பணத்தைக் கொள்ளையடிப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்களாக அதிமுக அமைச்சர்களும், முதல்வரும் இருக்கிறாரர்கள்.

அரசியலில் நேர்மை - எடப்பாடி பழனிசாமி அகராதியில் இல்லை. பொது வாழ்வில் தூய்மை - அதிமுக அமைச்சர்களிடம் அறவே இல்லை.

அண்ணா ஆட்சி செய்தார். தலைவர் கருணாநிதி ஆட்சி செய்தார். அவர்களின் சாதனைகள்; தமிழகத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் இன்றைக்கு ஒளி வீசுகிறது. திமுக ஆட்சியால் பயன் அடையாத ஒரு கிராமத்தைத் தமிழகத்தில் கண்டுபிடிக்க முடியாது.

அந்த அளவுக்கு மக்களின் நண்பனாக, தமிழக மக்களைத் தாங்கிப் பிடிக்கும் இயக்கமாகத் திமுக இருந்தது. இப்போது இருந்து வருகிறது. ஆனால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சி எப்படி இருக்கிறது?

எங்கள் ஆட்சி இது என்று சொல்லிக் கொள்ள அதிமுக தொண்டர்களே வெட்கப்படுகிறார்கள். அப்படியொரு ஆட்சியை - ஊழல் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதனால்தான் மக்களுக்கு விரோதமான, ஜனநாயகத்திற்கு விரோதமான, பொதுவாழ்வின் இலக்கணத்தைப் பாழ்படுத்திய இந்த அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என இன்றைக்கு மக்கள் முடிவு எடுத்துத் தயாராக இருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் கூட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு விட்டது. நீங்கள் எல்லாம் அந்த வரைவு வாக்காளர் பட்டியலில், தில்லு முல்லுகள் இருக்கிறதா என்பதைக் கவனமாகப் பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.

ஏன் இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்துங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்றால், அதிமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட இதுதான் நம் கையில் கிடைத்துள்ள ஆயுதம்.

ஆகவே, ஜனநாயகம் தந்துள்ள அந்த ஆயுதத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக நீங்கள் எல்லாம் இன்னும் ஆறு மாதத்திற்கு இரவு பகல் பாராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அந்த உழைப்பு நமக்காக அல்ல, நம் குடும்பத்திற்காக அல்ல; இந்த நாட்டுக்காக, தமிழ்நாட்டுக்காக. தமிழ்நாட்டில் உள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக, தமிழகத்தை மீட்பதற்காக என்று நீங்கள் எல்லாம் நினைவில் கொண்டு செயலாற்றிட வேண்டும்.

தமிழகத்தின் கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. காவிரிப் படுகையில் மட்டும் 6 வட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதுவும் முதல் முறையாக ஆழ்கடல் பகுதியில் இந்த ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிலப்பரப்பில், விளை நிலங்களைப் பாதிக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் திட்டம் அளிக்கப்பட்டு விட்டதால், இப்போது ஆழ்கடல் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் புகுத்துகிறார்கள். ஒரு கிலோ மீட்டர் அல்லது இரு கிலோ மீட்டர் அல்ல, மொத்தம் 4,000-க்கும் மேற்பட்ட சதுர கிலோ மீட்டரில் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்படுகிறது .

மீனவர்கள், விவசாயிகள், மக்கள் அனைவரையும் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து இதுவரை காவிரி டெல்டாவில் உள்ள அதிமுக அமைச்சர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. ஏன் முதல்வரோ, தமிழக அரசோ எதுவுமே கூறவில்லை.

இப்படித்தான் அதிமுக அரசும், அதன் அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி ஆகியோரும் தமிழக உரிமைகளைத் தாரை வார்க்கிறார்கள்.

தமிழகத்திற்கு எதிரான ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் நடுங்கி ஒடுங்கி மத்திய பாஜக அரசுக்குப் பயந்து நிற்கிறார்கள்.

ஆகவே, ஊழல் அதிமுக ஆட்சியை, ஊழல் முதல்வர் பழனிசாமியை வீட்டுக்கு அனுப்பிட, ஏன் தமிழ்நாட்டை அனைத்துத் துறையிலும் பின்னுக்குத் தள்ளிய இவர்களை அரசியலை விட்டே துறவறம் போக வைக்க திமுக தொண்டர்கள் அனைவரும் கட்டுக்கோப்பாக கட்சிப் பணியாற்றிட வேண்டும்.

ஒவ்வொரு தொண்டரும் ஒரு வீட்டுக்குப் பிரச்சாரம் என்று வைத்தால் கூட, ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சந்தித்து அதிமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி விடலாம்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்