ஓசூரில் போதிய பருவ மழையால் மானாவாரிக் கேழ்வரகு உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

By ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் பகுதியில் நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை உரிய காலகட்டத்தில் பெய்துள்ளதால் மானாவாரியில் பயிரிடப்பட்டுள்ள கேழ்வரகு நன்கு விளைந்து மகசூல் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 20 மூட்டைகள் வரை கேழ்வரகு உற்பத்தி கிடைக்க வாய்ப்புள்ளதாலும், ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஓசூர், பாகலூர், கெலமங்கலம், சூளகிரி, தளி உள்ளிட்ட பகுதியில் உள்ள கிராமங்களிலும், மலைப்பகுதியில் உள்ள பாலதோட்டனப்பள்ளி, பேலாளம், தக்கட்டி, உரிகம், சந்தனப்பள்ளி, அய்யூர், அந்தேவனப்பள்ளி, குந்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களிலும் கேழ்வரகு அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் மக்களின் பிரதான உணவாகக் கேழ்வரகு இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். ஆகவே இந்தக் கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் மானாவாரியில் கேழ்வரகு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இங்குள்ள மக்களின் முக்கிய உணவு தானியமாக கேழ்வரகு இருந்தாலும், வானம் பார்த்த பூழியாக மழையை நம்பியே கேழ்வரகு விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் கேழ்வரகு விளைச்சலுக்கு ஏற்ற வகையில் மழையுடன் மண் வளம் நிறைந்து காணப்படுவதால் இங்கு கேழ்வரகு சாகுபடியில் நல்ல மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இங்கு விளையும் தரமான மற்றும் சுவைமிக்க கேழ்வரகு தானியத்திற்குக் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, ஆனேக்கல், கனகபுரா, மளவள்ளி, கொள்ளேகால், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆகவே, அங்குள்ள மக்கள் தங்களின் உணவுத் தேவைக்காக ஓசூர், தளி உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு நேரடியாகவே வந்து கேழ்வரகை வாங்கிச் செல்கின்றனர். இதனால் இடைத்தரகர் பிரச்சினை இன்றி கணிசமான லாபத்துடன் கேழ்வரகு தானியத்தை எளிதில் விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்துத் தளி மலைக்கிராமத்தில் கேழ்வரகு பயிரிட்டுள்ள விவசாயி வெங்கடேஷ் கூறும்போது, ''ஒரு ஏக்கர் பரப்பளவில் கேழ்வரகு பயிரிட ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. உரிய காலத்தில் மழை பெய்தால் ஒரு ஏக்கரில் 20 மூட்டைகள் வரை கேழ்வரகு அறுவடை செய்யலாம். 100 கிலோ எடை உள்ள ஒரு மூட்டை கேழ்வரகு, ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை உரிய காலத்தில் பெய்ததால் கேழ்வரகுக் கதிர்கள் நன்கு விளைந்துள்ளன. இதனால் இரண்டு மடங்கு மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது'' என்றார்.

தளி வட்டத்தில் செழித்து வளர்ந்துள்ள கேழ்வரகுக் கதிர்கள்.

இதுகுறித்து ஓசூர் வட்ட வேளாண் உதவி இயக்குநர் மனோகரன் கூறியதாவது:

''ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பாகலூர், கெலமங்கலம், சூளகிரி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் மானாவாரியில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கேழ்வரகு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் அதிக மகசூல் தரும் ரகங்களான கே.எம்.ஆர்-301 (கர்நாடகா மண்டியா ராகி) மற்றும் கோ-15 ஆகிய கேழ்வரகு ரகங்களையே விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்ததால் கேழ்வரகு உற்பத்தி அதிகரித்துள்ளது. ஒரு ஹெக்டேருக்குச் சாதாரணமாக 2.50 டன் மகசூல் கிடைத்து வந்த நிலையில், நடப்பாண்டில் கேழ்வரகு மகசூல் 3.50 டன்னாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வேளாண்மைத் துறை விதைப்பண்ணை மூலமாகக் கேழ்வரகு பயிரிடும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் கேழ்வரகு விதை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரூ.66 விலையுள்ள 1 கிலோ எடை கொண்ட கேழ்வரகுப் பை, மானிய விலையில் ரூ.33க்கு வழங்கப்படுகிறது. இதுதவிர மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கேழ்வரகு பயிரிட உழவுப்பணிகளுக்காக ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,250 மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், வேளாண் துறை மூலமாக விதைப்பண்ணைக்குத் தேவையான கேழ்வரகு விதைகள், விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ.45 மற்றும் உற்பத்தி மானியமாக ரூ.10 என மொத்தம் ரூ.55 விலையில் கொள்முதல் செய்யப்படுகின்றன. அந்த வகையில் விவசாயிகளுக்கு வெளிச் சந்தையை விட இரண்டு மடங்கு விலை கிடைக்கிறது. ஆகவே தங்களுடைய பகுதியில் உள்ள வேளாண் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெற வேண்டும்''.

இவ்வாறு மனோகரன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

விளையாட்டு

25 mins ago

தமிழகம்

25 mins ago

தொழில்நுட்பம்

48 mins ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

48 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

மேலும்