நிலுவை ஊதியம், நலவாரியம் கோரி புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவையை இன்று தொழிலாளர்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி, அவர்களைக் கைது செய்தனர். இச்சம்பவத்தில் பெண்களுக்குக் காயம் ஏற்பட்டது.
புதுச்சேரி அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும், அமைப்பு சாராத் தொழிலாளர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை முன்பு முற்றுகையிட்டுக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நகரப் பகுதியில் சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டன. தொழிலாளர்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் போதிய அளவு பணியில் இல்லை. இப்போராட்டத்தில் ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ, எல்எல்எப், எம்எல்எப், ஏடியூடியூசி, அரசு ஊழியர் சம்மேளனம், புதுச்சேரி மாநில ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் கூட்டாகப் பங்கேற்றனர்.
இதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் கேட்டதற்கு, "பாசிக், பாப்ஸ்கோ, காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம், பஞ்சாலைகள், கூட்டுறவுச் சர்க்கரை ஆலை, அமுதசுரபி, காண்பெட், பாண்டெக்ஸ், பாண்பேப், காதி வாரியம், பிஆர்டிசி, ரேஷன் கடை உள்ளிட்ட அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குப் பல மாதங்கள் தொடங்கி பல ஆண்டுகள் வரை நிலுவையிலுள்ள ஊதியத்தைத் தரவேண்டும்.
அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நலவாரியத்தை அமைக்க வேண்டும். அனைத்து அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கும் தீபாவளி உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஏ.எப்.டி, சுதேசி, பாரதி மில்களை மூடுவதற்குப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறோம்" என்றனர்.
ஒருகட்டத்தில் சட்டப்பேரவைக்கு முன்பாக வந்தோரை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்தோர் தடுப்புகளைத் தாண்டி ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்றனர். ஆளுநர் மாளிகை முன்பாக அமர்ந்தும் கடும் கோஷங்களை எழுப்பினர். அதையடுத்து, போலீஸார் அவர்களை அகற்ற முற்பட்டனர். இச்சம்பவத்தில் 3 பெண்களுக்குக் காயம் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டோர் ஆளுநர் மாளிகைக் கதவிலும் ஏறத் தொடங்கினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஆயுதப் படை, ஐஆர்பிஎன் போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவையைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகையைச் சுற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
30 mins ago
சினிமா
35 mins ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago