புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு மசோதா கொண்டுவராமல் தமிழக அரசை குறைகூறுவதா? - திமுகவுக்கு அதிமுக கேள்வி

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு மசோதா கொண்டுவராமல், கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கு, தமிழக அரசை குறைகூற உண்மையில் தகுதியிருக்கிறதா? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ இன்று (அக். 24) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கிராமப்புற ஏழை, எளிய மாணவர் நலனுக்காக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த அரசு இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்ட மசோதாவை நிறைவேற்றி, இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக தமிழக அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். அதை சட்ட வடிவமாக கொண்டுவராமல் தடுக்கும் தமிழக ஆளுநருக்கு பல விதத்திலும் உரிய அழுத்தம் கொடுத்து வருகிறார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி கொடுத்தபின்னர்தான் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையே நடைபெறும் என்ற உறுதியான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு இன்று வரை அரசுப்பள்ளி மாணவர்கள் நலன்பெற மருத்துவக் கல்வியில் அரசு இட ஒதுக்கீட்டில் உரிய உள் ஒதுக்கீடு வழங்க சட்டப்பேரவையில் சட்ட மசோதாவை கொண்டுவராமல் தனியார் பள்ளிகளின் நலனுக்காக ஏழை, எளிய மாணவர்களுக்கு துரோகத்தை இழைத்து வருகிறது.

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டுக்கு மசோதா கொண்டுவராமல், புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கு, தமிழக அரசை குறைகூற உண்மையில் தகுதியிருக்கிறதா? நீட் தேர்வுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்-திமுக மத்திய கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களை தவிர்த்து அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அரசின் இட ஒதுக்கீடாக 50 சதவீதத்துக்கு மேல் பெற உரிய சட்டத்தை அதிமுக அரசு கொண்டுவந்து மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது.

ஆனால், புதுச்சேரி காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற உரிய சட்டத்தை கொண்டுவராமல் 30, 35 சதவீதம் என மனம்போன போக்கில் அரசு இட ஒதுக்கீடாக பெற்றுக்கொண்டு புதுச்சேரி மாணவர்களுக்கு துரோகத்தை இழைத்து வருகிறது. மாணவர்கள் நலனுக்காக தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் மக்களை திசை திருப்பி அரசியல் நடத்தும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரியில் மாணவர் நலன் சார்ந்த விஷயங்களில் என்ன நடக்கிறது என்பதாவது தெரியுமா?

தினந்தோறும் ஒரு பொய்யை கூறிக்கொண்டு ஆட்சி நடத்தும் முதல்வர் நாராயணசாமி மாணவர்களின் நலனுக்காக எதுவும் செய்யாமல் தொடர்ந்து துரோகத்தை இழைத்து வருகிறார். மருத்துவக் கல்வியில் 50 சதவீத இடங்களை அரசின் இட ஒதுக்கீடாக பெறாதது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழகம் போன்று மருத்துவக் கல்வியில் உள் ஒதுக்கீடு வழங்க முன்வராதது, பொருளாதார ரீதியில் முற்பட்டோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது இவையெல்லாம் மாணவ சமுதாயத்துக்கு முதல்வர் செய்து வரும் துரோகம். தன் சுய நலத்துக்காக இவ்விஷயங்களில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வரும் முதல்வர் நாராயணசாமி இதற்கும் துணைநிலை ஆளுநர்தான் காரணம் என்று பொய் சொல்லி தப்பிக்க செய்யவும் தயங்க மாட்டார்".

இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்