மா.சுப்பிரமணியம் மகன் மறைவு: முதல்வர் பழனிசாமி, வைகோ தொலைபேசி மூலம் ஆறுதல்

By செய்திப்பிரிவு

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியனின் மகன் கரோனா தொற்று பாதித்த நிலையில் மரணமடைந்தார். முதல்வர் பழனிசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இருவரும் மா.சுப்பிரமணியனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தனர்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியம் கடந்த செப்.28 ஆம் தேதி அன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கும் அவரது மனைவிக்கும் தொற்று உறுதியானது. ஆனால் லேசான அறிகுறி இருந்ததால் இருவரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் அவரது இரண்டாவது மகன் அன்பழகன் (34) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இவர் மாற்றுத்திறனாளி ஆவார். அன்பழகனுக்குத் தொற்று அதிகம் இருந்த காரணத்தால் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தனியறையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அன்பழகனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கரோனா தொற்று நெகட்டிவ் என வந்தது. இந்நிலையில் தொற்று பாதிப்பின் பின்விளைவு காரணமாக உடல்நலம் குன்றிய அன்பழகன் இன்று திடீர் மரணம் அடைந்தார்.

முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்புகொண்டு மா.சுப்பிரமணியனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் இன்று வெளியிட்ட தகவல்:

“சென்னை, சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியனின் இளைய மகன் சு.அன்பழகன் உடல்நலக் குறைவால் இன்று (17.10.2020) காலமானதையொட்டி, மா.சுப்பிரமணியனைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, ஆறுதல் கூறினார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து மதிமுக தலைமை நிலையம் இன்று வெளியிட்ட தகவல்:

“திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மா.சுப்பிரமணியனை அலைபேசியில் தொடர்புகொண்டு, தனது துக்கத்தையும், வேதனையையும் தெரிவித்து இரங்கல் கூறினார்”.

இவ்வாறு மதிமுக தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

வணிகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்