தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுப் போக்குவரத்துச் சேவை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், பேருந்துகள் இயக்கப்படாத 6 மாத காலத்துக்குச் சாலை வரி செலுத்துவதிலிருந்து விலக்குக் கேட்பதால் ஆம்னி பேருந்து சேவையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பொதுப் போக்குவரத்தும் தடை விதிக்ப்பட்டிருந்தது. செப். 1 முதல் மாவட்டங்களுக்குள், செப். 7 முதல் மாநிலத்துக்குள் அரசுப் பேருந்து சேவை தொடங்கியது. ரயில் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 2500 ஆம்னி பேருந்துகள் உள்ளன. ஆம்னி பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியும் இன்று வரை சேவை தொடங்கவில்லை. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகள் குறைந்தளவே இயக்கப்படுகின்றன. இதனால் சென்னை உட்பட தொலைதூர நகரங்களுக்குச் செல்லப் போதிய பேருந்து வசதியில்லாத நிலை உள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கு கரோனா ஊரடங்கு காலத்துக்கான சாலை வரியைச் செலுத்துமாறு அரசு உத்தரவிட்டது. சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்தால் மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசுடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் தீர்வு ஏற்பட்டால் ஆம்னி பேருந்து சேவை தொடங்க வாய்ப்புள்ளது.
இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மைதீன்பாட்சா கூறியதாவது:
கரோனா பரவும் என்பதால் ஊரடங்கு காலத்தில் பேருந்துகளை இயக்க வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை. எங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரணம் வழங்காவிட்டாலும் பரவாயில்லை, பேருந்துகள் இயக்கப்படாத காலத்துக்குச் சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இப்போது ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கிய நிலையில், இயக்கப்படாத காலத்துக்கான (இரு காலாண்டு) சாலை வரியைச் செலுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இரு காலாண்டுக்கான சாலை வரி என்பது ஒரு பேருந்துக்கு ரூ.4 லட்சம் வரை வரும். 6 மாதங்களாக இயக்கப்படாத பேருந்துக்கு எதற்கு சாலை வரி செலுத்த வேண்டும்.
பேருந்துகள் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருப்பதால், மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டுவர பெருந்தொகை செலவிட வேண்டி உள்ளது. 6 மாதங்களாக ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்துள்ளோம். இவ்வளவு சிரமங்களுக்கு இடையே சாலை வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினால் ஆம்னி பேருந்து தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படும். சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்கும்பட்சத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்குத் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சாலை வரி செலுத்துவதிலிருந்து அரசு விலக்கு அளிக்க உத்தரவிடக் கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை செப்.25-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
சினிமா
27 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
11 mins ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago