அரசியல் கட்சியின் தலைவர் ஒருவரை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக ஆளுநர் நியமித்திருப்பதற்குக் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையில் ஏராளமான திணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்குக் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மத்தியில் அதிகாரத்தில் உள்ள பாஜக அரசு அனைத்தையும் காவி மயமாக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. யார் எந்தக் கருத்தைத் தெரிவித்தாலும் அதனை உள்வாங்க மாட்டோம் என்கிற சர்வாதிகாரமான போக்குடன் பாஜக அரசு செயல்படுகிறது.
இதன் ஒரு பகுதியாகத்தான் பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதியை பாரதியார் பல்கலை கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக ஆளுநர் நியமனம் செய்திருப்பதாகத் தெரிகிறது. நேரிடையான அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவரை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவது என்பது எப்போதும் இல்லாத நடைமுறை. இதனையும் இப்போது தகர்த்திருக்கிறார்கள் என்றே பார்க்க வேண்டியுள்ளது. தமிழக ஆளுநரின் செயல் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேரிடையாக அரசியல் கட்சியில் உள்ளவரை, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பது, மிகவும் தவறான முன்னுதாரணமாகும். சிண்டிகேட் உறுப்பினரை நியமிக்க அதிகாரம் அளித்துள்ள அதே நேரத்தில் நியமனங்களைச் செய்யும் முன்பு, துணை வேந்தருடன் கலந்து ஆலோசித்து நியமிக்க வேண்டும் என தெளிவான விதி இருக்கிறபோது, பாஜக மாநில துணைத் தலைவர் ஒருவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க, துணை வேந்தர் எப்படிப் பரிந்துரை செய்தார் என்கிற கேள்வி எழுகிறது.
புதிய கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிற நிலையில் இக்கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த இத்தகைய நியமனங்கள் மூலம் புறவாசல் வழியாகப் பாஜக தொடங்கியிருக்கிறதோ இதற்கு ஆளுநர் உடந்தையாக உள்ளாரோ என்கிற ஐயம் எழுகிறது. பகிரங்கமாக ஒரு அரசியல் கட்சியின் தலைவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமனம் செய்திருப்பதை ஏற்க முடியாது. உடனடியாக இதனை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும்.
தமிழக முதல்வர், உயர் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு இந்த நியமனத்தை ரத்து செய்ய ஆளுநருக்கு அழுத்தம் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு பி.ஆர். நடராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
57 mins ago
ஜோதிடம்
1 hour ago
தொழில்நுட்பம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago