காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடம்

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் கவலை தரும் விதத்தில் உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் பதிவிட்டுள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் தம்பியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் சித்தப்பாவுமான வசந்தகுமார் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர். தொழிலதிபராக விளங்கும் வசந்தகுமார் (70) கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் வசந்தகுமார் ஈடுபட்டு வந்தார். சமீபகாலமாக அவர் சென்னையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், கரோனா பரிசோதனை செய்தபோது வசந்தகுமாருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதி இரவு வசந்தகுமார் அவரது மனைவி இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வசந்தகுமார் எம்.பி. ஆரம்பத்தில் நலமாக இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவர் வென்டிலேட்டர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து பேட்டி அளித்தார். வென்டிலேட்டரில் இருந்தாலும் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முதல் வசந்தகுமாரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் கணவர் சவுந்தரராஜன் மருத்துவர். அவர் சென்னையில் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்துக் கேட்டறிந்து, உடனிருந்து வருகிறார்.

வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் உறுதிப்படுத்தி ,அவர் விரைவில் நலம் பெற இறவனிடம் வேண்டுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சஞ்சய் தத் ட்விட்டர் பதிவு:

“சில நிமிடங்கள் முன் தான் வசந்தகுமாரின் மகனிடம் பேசினேன். மருத்துவமனை நிர்வாகம் அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது என்று சொன்னார். செயல் தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உடல் நலம் தேற, கடவுள் அவருக்குத் திடமான உடல் நலனை அளித்து, நோயை எதிர்த்துப் போராடி விரைவில் அவர் உடல் நலன் தேற நாம் அனைவரும் இணைந்து பிரார்த்திப்போம்”.


இவ்வாறு சஞ்சய் தத் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

32 mins ago

வாழ்வியல்

56 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

30 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்