கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டநோயாளிகளுக்கு யோகாவுடன் நடனம்: மூலிகை சூப் வழங்கி சித்த மருத்துவர்கள் அசத்தல்

By ந. சரவணன்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு யோகாவுடன் நடனம், இளையராஜா பாட்டுடன் நிலாச்சோறு, மூலிகை சூப் வழங்கி மருத்துவர்கள் அசத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சித்த மருத் துவம் சார்பில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட் டுள்ளது. 50 படுக்கை வசதிகளை கொண்ட இந்த மையத்தில் 42 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர்.

கடந்த ஜூலை 17-ம் தேதிதொடங்கப்பட்ட இந்த மையத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு பாரம் பரிய முறைப்படி உணவு வகைகள், உடற்பயிற்சி, யோகா, மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதால், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வெகு விரைவாக குணமடைந்து வீடு திரும்புவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுமட்டுமின்றி கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு தன்னம்பிக்கை வர தினமும் தியானப்பயிற்சி, மனதை ஒருநிலைப்படுத்த சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம், சித்த மருத்துவ மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வி.விக்ரம்குமார் கூறும்போது, “திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் அனுமதி கேட்டோம். அதன்படி, நாட்றாம்பள்ளியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 42 பேர் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு கரோனா தொற்றை விரட்ட மருந்து, மாத்திரைகள் மட்டும் போதாது, பாரம்பரிய முறைப்படி உணவு மற்றும் ஆலோசனைகளை வழங்க முடிவு செய்தோம். அதன்படி, தினமும் காலை 7 மணிக்கு கபசுர குடிநீர், 8 மணிக்கு சிற்றுண்டி, காலை 10 மணிக்கு ஆடாதுடை கசாயம், 11 மணிக்கு தூதுவளை, முடக்கத்தான் மூலிகை சூப், பிற்பகல் 1 மணிக்கு மதிய உணவு (சைவம்), மாலை 3 மணிக்கு காய்கறி சூப், 4 மணிக்கு சுண்டல், கம்பு ரொட்டி, தினைபாயசம், கேழ்வரகு, கம்பு லட்டு, பாசிப்பயறு, கொண்டை கடலை போன்றவை 7 நாட்களுக்கு ஒன்று என தொடர்ச்சியாக வழங்கி வருகிறோம்.

மாலை 6 மணிக்கு மீண்டும் கபசுர குடிநீர், சர்க்கரை நோயாளிகளுக்கு அவரை குடிநீர் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம், நடனம் கற்றுத் தரப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு இளையராஜா பாட்டுடன் அனைத்து நோயாளிகளுக்கும் சமூக இடைவெளியை பின்பற்றி தரையில் அமர்ந்து நிலாச்சோறு வழங்கி வருகிறோம்.

மேலும், அவ்வப்போது கரோனா நோயாளிகளுக்கு மன தைரியத்தை பெருக்க மனநல ஆலோசனைகள், மன அழுத் தத்தை குறைக்க உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங் கப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள தொலைக் காட்சிபெட்டியில் தினமும் சினிமா நகைச்சுவைக் காட்சிகள் ஒளிபரப்பப்படு கிறது. ‘வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டுப்போகும்’ என்பதால் இந்த புதிய முயற்சியை தொடங்கியுள்ளோம்.

மேலும், சிறுவர், சிறுமியர் விளையாடி மகிழ ஊஞ்சல், இசை நாற்காலி போன்ற விளை யாட்டுகளும் நடத்தப்படுகின்றன.

ஒரு நோயாளியை மருந்து, மாத்திரைகளை கொண்டு குணப்படுத்துவதைக் காட்டிலும் சுற்றுச்சூழல், தன்னம்பிக்கை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை வழங்கினாலே போதும் என்பதால் இது போன்ற முயற்சிகளை கடைப்பிடித்து வருகிறோம். அதற்கு நல்ல தீர்வும் கண்டுள்ளோம்” என்றார்.

இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி.கண்ணம்மா கூறும்போது, “திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் கடந்த மாதம் 42 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில், நாங்கள் அளித்த மருத்துவ சிகிச்சையில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள வர்களில் சிலர் விரைவில் வீடுகளுக்கு திரும்புவார்கள்.

சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 24 மணி நேரமும் நோயாளிகளை கண்காணிக்க 2 சித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவி யாளர்கள் உள்ளனர். அது தவிர பாரம்பரியமிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவு வகைகளை சமைக்க கைதேர்ந்த சமையல் கலைஞர் களும் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்” என்றார். ந.சரவணன்


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

13 mins ago

சினிமா

18 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்