1986-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமல்படுத்தப்பட்ட கல்விக் கொள்கை மீண்டும் 1992-ம் ஆண்டில் திருத்தம் கண்டது. கல்விக் கொள்கை அமலாகி 34 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் மீண்டும் புதிய கல்விக் கொள்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, இதற்கான வரைவு அறிக்கையைக் கடந்த ஆண்டு மே மாதம் சமர்ப்பித்தது. அப்போதே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், அதற்குத் தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் பல்வேறு மாற்றங்கள், திட்டங்கள் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வி கட்டமைப்பு முறை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கட்டாய மழலையர் கல்வி, குறைக்கப்பட்ட, புதிய பாடத்திட்டம், திருத்தப்பட்ட பொதுத் தேர்வு முறை ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல பாடத்திட்டத்துடன் கூடுதல் பாடத்திட்டங்களும் (எழுத்து, பேச்சு, ஓவியம், நடனம் இன்னபிற) கணக்கில் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2035-ம் ஆண்டில் மொத்த சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக (தற்போது 26.3%) உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 10+2 என்ற முறையை 5+ 3+ 3+ 4 (3-8, 8-11, 11-14, 14-18 வயது) பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும்.
அதாவது 4 பிரிவுகளாகக் கற்றல் அமைப்பு பிரிக்கப்படுகிறது. அவை
* அடித்தள நிலை (மழலையர் கல்வி மற்றும் 1, 2-ம் வகுப்புகள்)
* தயாரிப்பு நிலை (3, 4, 5 ஆம் வகுப்புகள்)
* நடுத்தர நிலை (6, 7, 8-ம் வகுப்புகள்)
* மேல்நிலை (9 முதல் 12-ம் வகுப்புகள் வரை).
* மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரையில், தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
* மும்மொழிக் கொள்கை அடிப்படையில் பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் விருப்ப மொழியாக அளிக்கப்படும்.
* பள்ளிப் பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். அந்தந்த மாநிலங்களே பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
* மாணவர்கள் பள்ளி ஆண்டில் அதிகபட்சமாக இரண்டு முறை பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். ஒரு தேர்வு பிரதான தேர்வாகவும் இன்னொரு தேர்வு மேம்பாட்டுத் தேர்வாகவும் இருக்கும்.
* 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.
* இடைநிலைக் கல்வியில், கொரிய, ஜப்பானிய, தாய், பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், போர்த்துகீசியம் மற்றும் ரஷ்ய மொழிகளில் படிக்கலாம்.
* தொழிற்கல்விக்கும் பிரதான கல்விக்கும் பெரிய வேறுபாடு இருக்காது.
* கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகள் அனைத்துக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
36 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
4 hours ago