முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன் என ஆளுநர் தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றதில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு, 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு, கரோனா தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ''கடந்த 2019 நவம்பர் மாதம், பேரறிவாளனுக்கு, 90 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் பரோல் வழங்க முடியும்'' எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ''பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது'' தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பரோல் வழங்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்கத் தேவையில்லை என, ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு, தீர்ப்பு வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், அரசியலமைப்புப் பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில், கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனத் தெரிவித்து, 2 ஆண்டுகளுக்கு மேலாக, இவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், ஏழு பேரின் விடுதலை தொடர்பாகவும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாகவும் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன் என ஆளுநர் தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாக, தமிழக அரசு இன்று (ஜூலை 29) சென்னை உயர் நீதிமன்றதில் தெரிவித்துள்ளது.
ஜெயின் கமிஷனால் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை அறிக்கைக்குக் காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் இருந்து தமிழக அரசுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் நடராஜன் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, பேரறிவாளனின் பரோல் மனு மீது முடிவெடுக்க காலதாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்றத்தின் நேரத்தைத் தேவையின்றி வீணாக்குவதற்கு அபராதம் விதிக்கலாமா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்ற திங்கட்கிழமைக்குள் (ஆக.3) அரசு உரிய பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 mins ago
இந்தியா
10 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
3 hours ago