வாணியம்பாடி அருகே நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மெழுகில் வரைந்த ஓவியத்தை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். தான் கற்றுக்கொண்ட கலையை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவசமாகக் கற்றுத் தரத் தயார் என ஓவியர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் விஜயகுமார் (47). இவர், கடந்த 25 ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார். குறிப்பாக, மெழுகினால் விஜயகுமார் வரையும் ஓவியங்கள் காண்போரை மெய் சிலிர்க்கச் செய்கிறது.
தமிழகத்தில் கரோனோ ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் நகைக்கடைகள் திறக்காமல் இருப்பதால், ஊரடங்கு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற எண்ணிய விஜயகுமார், பல அற்புதமான மெழுகு ஓவியங்களை வரைந்துள்ளார். அந்த ஓவியங்களை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
காகிதம் கொண்டு பென்சிலால் ஓவியத்தை வரையும் விஜயகுமார், அதன் பிறகு அதன்மேல் கண்ணாடியை வைத்து மெழுகை உருக்கி துளித்துளியாக அதன் மீது விட்டு ஊசி மற்றும் பிளேடு கொண்டு செதுக்கி அற்புதமான ஓவியங்களை வரைந்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள் மட்டுமின்றி, கிருஷ்ணன் - ராதா, சிவன் - பார்வதி, குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், குதிரைகள், கடல் உயிரினங்கள், உலகத் தலைவர்களின் படங்கள் எனப் பல்வேறு வகையான படங்களை மெழுகுவர்த்தியை உருக்கி, மிக தத்ரூபமாக வரைந்துள்ளார்.
இதுகுறித்து ஓவியர் விஜயகுமார் கூறும்போது, "நான் ஒரு சிறந்த ஓவியராக வர ஆசைப்படுகிறேன். கல்லூரியில் விலங்கியல் பட்டப்படிப்பு படித்தேன். படிப்பு முடிந்த உடன் ஓவியம் வரைவதற்கான சூழ்நிலை எனக்கு அமையவில்லை.
கடந்த 25 ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருகிறேன். இந்நிலையில், தற்போது ஊரடங்கு காலம் என்பதால், நகைக்கடைகளைத் திறக்க முடியவில்லை. இதனால் எனக்குக் கிடைத்த இந்த நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற எண்ணினேன். இதைத்தொடர்ந்து, மெழுகுவர்த்தியைக் கொண்டு உருக்கி, அதில் ஓவியங்களை வரைந்துள்ளேன். ஒவ்வொரு ஓவியத்தையும் வரைய எனக்குப் பல மணி நேரம் ஆனது.
எனக்குத் தெரிந்த இந்தக் கலையை, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என யாருக்கு வேண்டுமானாலும் அவர்களுக்கு இலவசமாகக் கற்றுத் தர விரும்புகிறேன்" என்றார் .
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் சுமார் 120 பேர் கலந்து கொண்டனர். அதில், விஜயகுமார் வரைந்த அப்துல்கலாம் ஓவியம் சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago