இந்தோனேசியாவில் இருந்து தமிழர்கள் 110 பேரை தனி விமானம் ஏற்பாடு செய்து தமிழகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது இந்தோனேசிய தமிழ்ச் சங்கம்.
இந்தோனேசியாவில் இருந்த தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள இந்தியத் தூதரகத்தை கடந்த ஏப்ரல் மாதம் அணுகினார்கள். ஆனால், அப்போது அவர்களின் கோரிக்கைக்குத் தூதரகம் தரப்பிலிருந்து சாதகமான பதில் வரவில்லை. இதையடுத்து, உதவிக்கு வந்த இந்தோனேசிய தமிழ்ச் சங்கம், இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக இந்தியப் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்குக் கோரிக்கை கடிதம் அனுப்பியது. பிரதமர் மற்றும் முதல்வர் தரப்பிலிருந்து இதற்கு ரியாக்ஷன் ஏதும் இல்லாத நிலையில், ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அப்படியும் காரியம் கைகூடாத நிலையில், மே 2-ம் தேதி, வந்தே பாரத் திட்டத்தை அறிவித்து அதன் மூலமாக, வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது இந்திய அரசு. அப்போதும் இந்தோனேசிய தமிழர்களுக்கு விடிவு பிறக்கவில்லை.
இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்தோனேசிய தமிழ்ச் சங்கத் தலைவர் ரமேஷ், “அந்தச் சமயத்தில் சுமார் 300 தமிழர்கள் இந்தோனேசியாவிலிருந்து தமிழகம் வருவதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தோனேசியாவிலிருந்து (தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பதால்) தமிழகத்துக்கு விமானங்களை இயக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்தது இந்தியத் தூதரகம்.
இதனால் தமிழகம் வருவதற்குத் தயாராய் இருந்தவர்களில் பலர் டெல்லி, பெங்களூரு விமானச் சேவைகள் மூலம் தமிழகத்துக்குள் வந்தனர். அதேசமயம், நேரடியாக தமிழகம் செல்லும் விமானத்துக்காக அங்கேயே பலர் காத்திருந்தார்கள். மீண்டும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள், ‘எங்களால் எதுவும் செய்வதற்கில்லை; நீங்கள் வேண்டுமானால் இந்திய அரசிடம் பேசிப் பாருங்கள்’ என்றார்கள்.
அவர்கள் சொன்னபடி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் நாங்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அதன் பிறகுதான், இந்தோனேசியாவிலிருந்து தமிழகத்துக்கு மீட்பு விமானத்தை அனுமதிக்க இந்திய அரசு சம்மதம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இந்தோனேசியாவிலிருந்து திருச்சி வருவதற்கான ஏர் ஏசியாவின் சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்தோம். அதில் பயணம் செய்வதற்கு 169 பேர் தயாராய் இருந்தார்கள். இவர்களில் 110 பேர் தமிழர்கள். எஞ்சியவர்கள் இந்தியாவின் 13 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதில் கர்ப்பிணிகள் ஐந்து பேரும் 80 வயதைக் கடந்தவர்கள் 3 பேரும் இருந்தார்கள்.
இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இவர்கள் அத்தனை பேருக்கும் ‘ரேபிட் டெஸ்ட்’ எடுக்க ஏற்பாடு செய்தோம். காலை 8 மணிக்கு விமானம் புறப்படும் நேரம் என்பதால் அவர்கள் அத்தனை பேருக்குமான காலை உணவைத் தமிழ்ச் சங்கமே ஏற்பாடு செய்து கொடுத்தது. அத்துடன், அவர்கள் அனைவருக்கும் விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட முகத்தை நன்றாக மூடுகிற முகக்கவசங்களையும் ஏற்பாடு செய்து வழங்கினோம்.
நேற்று பத்திரமாய் திருச்சி விமான நிலையம் வந்து இறங்கி விட்டார்கள். அங்கே அத்தனை பேருக்கும் பிசிஆர் டெஸ்ட் எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தோம். டெஸ்ட் எடுப்பதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், தமிழக அரசுத் தரப்பில் பேசி, கட்டணமின்றி சோதனைகள் செய்ய ஏற்பாடு செய்தோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 mins ago
வணிகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago