தமிழாசிரியர் கழகம் சா.இராமாநுசம் மறைவு: தமிழ் ஆசிரியர்களுக்கு உரிமையும் பெருமையும் கிடைக்க உழைத்தவர்

By கே.கே.மகேஷ்

தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும், கழகத்தின் மதிப்பியல் தலைவருமான புலவர் சா.இராமாநுசம் இன்று காலமானார். அவருக்கு வயது 88.

செஞ்சி அருகே உள்ள ரெட்டணை எனும் ஊரில் பிறந்த இவர், சென்னையில் வசித்து வந்தார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். மனைவியும், மருத்துவருமான பிரமிளா ஏற்கெனவே மறைந்துவிட்டார்.

தமிழாசிரியர்கள் வகுப்பாசிரியர் ஆக முடியாது, மற்ற ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு கிடையாது என்கிற நிலையை மாற்றப் போராடி, அவர்கள் கல்வி அதிகாரியாகவே வரலாம் என்னும் நிலையை உருவாக்கியவர் சா.இராமாநுசம்.

அவரது முக்கியமான பணிகள் குறித்து தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் இன்றைய பொதுச்செயலாளர் சு.நாகேந்திரன் கூறியதாவது:

’’தமிழக ஆசிரியர் சங்கங்களில் மூத்த சங்கங்களில் ஒன்றான தமிழகத் தமிழாசிரியர் கழகம் 1943-ல் தொடங்கப்பட்டது. தெ.பொ.மீ., ரா.பி.சேதுபிள்ளை, ம.கி.தசரதனார், மு.வ. போன்றோர்கள் அங்கம் வகித்த சங்கம் இது. இந்தச் சங்கத்தின் வளர்ச்சிக்காகச் சைக்கிளிலேயே சென்று ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று உறுப்பினர் கட்டணம் வசூலித்தவர் புலவர் சா.இராமாநுசம். 1979-ல் சங்கத்தின் மாநில இணைச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், பிறகு தலைவராகி மாநிலத் தலைவராக இருமுறை என்று 14 ஆண்டுகள் மாநிலப் பொறுப்பில் இருந்து தொண்டாற்றியவர்.

எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஏறத்தாழ 340 தமிழாசிரியப் பணியிடங்கள் உபரி என்று கண்டறியப்பட்டு ஒரே நாளில் 340 தமிழாசிரியர்களும் தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். வாழ்வாதாரத்தையே இழந்து தவித்த தமிழாசிரியர்களின் இன்னல் தீர்க்க விரைந்து செயல்பட்ட சா.இராமாநுசம், முதல்வரைச் சந்தித்து அவர்களின் நிலையினையும், பிரச்சினையைச் சரிசெய்யும் வழியினையும் கூறி 340 பேரையும் மீண்டும் பணியிலமர்த்திய சாதனைக்குச் சொந்தக்காரர்.

1985-ம் ஆண்டு நடைபெற்ற வீரஞ்செறிந்த அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புப் போராட்டத்தில் உயர்மட்டக் குழு உறுப்பினராக இருந்து போராட்டத்தை வழிநடத்திய போராளி அவர். அதற்காக 45 நாட்கள் சிறையிலும் இருந்தார். போராட்ட முடிவில் தமிழக அரசு அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக அவர்கள் பெற்ற பயிற்சிக்கு ஒரு வளரூதியத்தைச் சிறப்பு ஊதியமாக வழங்கி ஆணை பிறப்பித்தது.

ஆனால் இவ்வூதிய ஆணை தமிழாசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. வெகுண்டெழுந்த புலவர் உரிய வழியில் அப்போதைய கல்வியமைச்சர் பொன்னையனைச் சந்தித்து நெருக்கடி கொடுத்து அந்த ஊதியத்தைத் தமிழாசிரியர்களுக்கும் பெற்றுத் தந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாகத் தலைநகர் சென்னையில் தமிழாசிரியர் கழகத்துக்குச் சொந்தக் கட்டிடம் வாங்க, பெரிதும் துணை நின்றவர். அகவை முதிர்ந்த பின்னும் புலவர் குரல் என்னும் வலைப்பூவில் தொடர்ந்து கவிதைகள் எழுதி தொழில் நுட்பத்தையும் இலக்கியத்தையம் கைவசப்படுத்தியவர்".

இவ்வாறு நாகேந்திரன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

8 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

38 mins ago

சுற்றுச்சூழல்

48 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

43 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்