3 மாத வீட்டு வாடகை கேட்கக் கூடாது; அரசாணை வெளியிடக் கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

வீட்டின் உரிமையாளர்கள் மூன்று மாத காலத்திற்கு வாடகையை வசூலிக்கக் கூடாது என அரசாணை பிறப்பிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் இன்று ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், “கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்குக் காலத்தைக் கருத்தில் கொண்டு, குடியிருப்புவாசிகளிடம் இருந்து நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மார்ச் 29-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவைப் பின்பற்றி தமிழக அரசும் பேரிடர் மேலாண்மைச் சட்டம், அவசர கால, பெருந்தொற்று நோய் தடுப்பு அவசரகாலச் சட்டத்தின் கீழ், வாடகை வசூல் செய்வதற்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை வெளியிட்ட சமயத்தில் 15 நாட்கள் வரைதான் ஊரடங்கு அமலில் இருந்தது.

இப்போது, ஊரடங்கு காலம் 60 நாட்களுக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டுள்ளதால், மூன்று மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என்று வீடு மற்றும் நில உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். இது சம்பந்தமாக அரசுக்கு மனு அனுப்பியும் எந்தப் பதிலும் இல்லை. பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகையைக் கூட வசூல் செய்துள்ளனர். வாடகை செலுத்தாதவர்கள் காலி செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக் கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வாடகைதாரர்களிடம் வாடகை கேட்டு வற்புறுத்தினாலோ, அல்லது வாடகைக் கட்டணம் வசூலித்தாலோ, காலி செய்தாலோ, வீட்டின் உரிமையாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

டெல்லியில் வாடகையை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில், ஒரு மாத வாடகையை வசூல் செய்யக்கூடாது என்று அரசாணை வெளியிடப்பட்டும், அந்த உத்தரவுகள் அனைத்தும் காகித அளவில் உள்ளன. ஊரடங்கால், பொதுமக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தொழில், வேலைவாய்ப்பு இல்லாததால் கடந்த இரண்டு மாத காலத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வாடகைக்குக் குடியிருக்கும் மக்களால், மாதாந்திர வாடகையைச் செலுத்த முடியவில்லை என்பதால், பெருந்தொற்றுக் காலத்தில் வாடகை வசூல் செய்யக்கூடாது எனறு மத்திய அரசு, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை விவரத்தை வருவாய் மற்றும் காவல்துறை மூலமாக பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விதமாக விளம்பரம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இரண்டு மாதத்திற்கும் மேலாக அமலில் இருந்து வரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாடகை தாரர்களிடம் இருந்து மூன்று மாத காலத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என்று அனைத்து நில, வீட்டின் உரிமையாளர்களுக்கும் உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்