அமைச்சர் வேலுமணி கரோனா பரிசோதனை செய்து கொள்கிறார்: திமுக எம்எல்ஏவுக்கு அதிமுக எம்எல்ஏ கே.அர்ச்சுனன் பதிலடி

By ஆர்.கிருஷ்ணகுமார்

அமைச்சர் வேலுமணி சென்னை செல்லும் போதும், சென்னையிலிருந்து கோவை திரும்பும் போதும் கரோனா பரிசோதனை செய்து கொள்கிறார் என்று அதிமுக கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.அர்ச்சுனன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நா.கார்த்திக் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ''மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களுக்கும் நூற்றுக்கணக்கான கட்சியினர் சூழ அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்கிறார். இதனால், சமூகப் பரவலுக்கு ஆளுங்கட்சி நிகழ்ச்சிகளே காரணமாகிவிடுமோ என்று மக்களிடம் அச்சம் நிலவுகிறது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டாரா என்று தெரியவில்லை'' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கு விதமாக அதிமுக கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, கரோனா தொற்று பரவுவதையும், இறப்பு விகிதத்தையும் கட்டுப்படுத்தியுள்ளதுடன், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தேவையான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளது. முதல்வருக்கு உறுதுணையாக இருந்து,
மக்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

ஆனால், திமுக எம்எல்ஏ நா.கார்த்திக், திமுக தலைமையைத் திருப்திப்படுத்த வேண்டி, மக்கள் வெறுக்கும் வகையில் அறிக்கை வெளியிடுகிறார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கரோனா பரிசோதனை செய்து கொண்டாரா என்று தெரியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு என்ன செய்தார்கள்? செம்மொழி மாநாடு என்ற பெயரில் மக்கள் பணத்தை விரயம் செய்தார்கள். சட்டப்பேரவையில் தொகுதி வளர்ச்சியைப் பற்றி பேசாமல், வெளிநடப்பு மட்டுமே செய்தார்கள்.

மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அதிமுகவினர் செயல்படுவதை பொறுத்துக் கொள்ளமுடியாமல், ஊழல் செய்வதாகக் குறைகூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அமைச்சர் சென்னை செல்லும் போதும், சென்னையிலிருந்து கோவை திரும்பும் போதும் கரோனா பரிசோதனை செய்து கொள்கிறார்.

`ஒன்றிணைவோம் வா’என்ற பெயரில் கரோனா தொற்று பரவக் காரணமாக இருந்தது திமுகதான் என்பதை மக்கள் அறிவார்கள். அதேபோல, மக்கள் வெறுக்கும் வகையில் அரசியல் செய்கிறார்கள் என்பதையும் அனைவரும் அறிவர்''.

இவ்வாறு அர்ச்சுனன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

27 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

51 mins ago

க்ரைம்

57 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்