இந்திய - சீன எல்லையில் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம்

By செய்திப்பிரிவு

இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே எல்லையில் நடந்த மோதலில் தமிழக வீரர் பழனி உட்பட 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

ஹவில்தாராக பணியாற்றிய பழனி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் கடுக்கலூரைச் சேர்ந்தவர்.

ராணுவ வீரர் பழனியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது உறவினர்கள், கிராமத்தினர், சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று முன்தினம் முதல் கடுக்கலூருக்கு வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர். ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் நேற்று பழனியின் பெற்றோர், அவரது மனைவி உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தமிழக முதல்வர் அறிவித்தபடி குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும், ரூ. 20 லட்சம் நிதியும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

லடாக்கில் சீனப் படையினர் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் தந்தையிடம் ஆறுதல் கூறிய பெங்களூருவிலிருந்து வந்திருந்த ராணுவ வீரர்கள். (வலது ) ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ். பழனியின் உடல் நேற்றிரவு விமானம் மூலம் மதுரை வந்தது. அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு சொந்த கிராமத்துக்குக் கொண்டு வரப்படும் என ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.சொந்த ஊரான கடுக்கலூரில் பழனியின் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் இன்று காலை (வியாழக்கிழமை) ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. பழனியின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல பெங்களூருவிலிருந்து ராணுவப்படை பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் நேற்று வந்தனர்.

பழனியின் தந்தை காளிமுத்து கூறும்போது, மகன் பழனி 22 ஆண்டுகள் ராணுவத்தில் பணி யாற்றி நாட்டுக்காக வீரமரணம் அடைந்தது பெருமையாக உள்ளது. பழனியின் அறிவுரையின் பேரில் 2-வது மகன் இதயக்கனியும் ராணுவத்தில் சேர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். உயிர்நீத்த எனது மகனின் சேவையைப் பாராட்டி அரசே நினைவு மண்டபம் கட்டி பெருமைப்படுத்த வேண்டும். இதுகுறித்து ஆட்சியரிடமும் கோரியுள்ளேன், என்றார்.

இதற்கிடையே, ராணுவத்தில் ஹவில்தாராகப் பணியாற்றும் பழனியின் சகோதரர் இதயக்கனி (27), அண்ணனின் மரணத்தை தொடர்ந்து நேற்று ராஜஸ்தானிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், நானும், அண்ணனும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சந்திக்கவில்லை. கடைசியாக ஜூன் 3-ம் தேதி போனில் பேசினேன்.

அண்ணன் வீரமரணம் அடைந்த செய்தி கிடைத்ததும், அவரது நல்லடக்கம் உள்ளிட்டவற்றை செய்வதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளேன் என்றார்.

ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் தலைமையிலானோர் பழனியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 2 லட்சத்தை வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

க்ரைம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்