சேமிப்புப் பணம் ரூ.5 லட்சத்தை ஏழை மக்களுக்கு செலவழித்த மதுரை மாணவி; கல்விச்செலவை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தனது கல்விக்காக தந்தை சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழை மக்களுக்காகச் செலவழித்த மதுரை முடிதிருத்தும் கடை உரிமையாளர் மகள் படிப்புச்செலவை அரசே ஏற்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த மேலமடை முடிதிருத்தும் கடைக்காரர் தனது மகள் நேத்ராவின் உயர் கல்விக்காக ரூ.5 லட்சம் சேமித்து வைத்திருந்தார். கரோனா பேரிடர் நேரத்தில் ஏழை மக்களுக்காக உதவி செய்யலாம் என மகள் நேத்ரா கேட்டுக்கொண்டார். இதையடுத்து சேமிப்புப் பணத்தில் நிவாரணப் பொருட்களை வாங்கி ஏழை மக்களுக்கு வழங்கினார்.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து அவர்களது செயலை பிரதமர் தனது 'மான் கி பாத்' உரையில் குறிப்பிட்டுப் பாராட்டு தெரிவித்தார். இதனால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் நேத்ராவும், அவரது தந்தை மோகனும் பிரபலமானார்கள். நேத்ராவுக்குப் பாராட்டுகள் குவிந்த நிலையில் அவரது உயர் கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

“தமிழக அரசு கரோனா வைரஸ் தொற்று நோயைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தன்னார்வலர்களும் கரோனா நிவாரணப் பணியில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் பிரதான சாலையில் முடி திருத்தகம் நடத்திவரும் மோகன் என்பவர் தனது மகள் செல்வி நேத்ராவின் படிப்புக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தை, தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்கச் செலவிட்டதற்கு தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் எதிர்காலப் படிப்பிற்குச் சேமித்து வைத்திருந்த பணத்தை, ஊரடங்கு காலத்தில், ஏழை, எளிய மக்களுக்குச் செலவிட்டதை அங்கீகரிக்கும் வகையில், நேத்ராவின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும்.

நேத்ரா அனைத்து வகையிலும் சிறந்து விளங்கி, இதுபோன்ற பற்பல பாராட்டுதல்களையும், அங்கீகாரத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் மேலும் பெருமை சேர்த்திட வேண்டும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

20 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

மேலும்