கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் என சிகிச்சை அளிக்கும் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு சாதாரண பொதுமக்கள் முதல் முன்னணியில் உள்ள மருத்துவப் பணியாளர்கள், காவல் அதிகாரிகள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அது அரசியல் கட்சித் தலைவர்களையும் பாதித்துள்ளது.
கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கட்சிப் பணியில் ஜெ.அன்பழகன் தீவிரம் காட்டி வந்தார். பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்குவது, திமுக தலைவரின் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில் பயனாளிகளுக்கு உதவி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்த ஜெ.அன்பழகனுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதில் அவர் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2-ம் தேதி குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமானது. கரோனா வைரஸ் தொற்று வேகமாக உடலில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து ஜெ.அன்பழகனுக்கு நேற்று முதல் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் 24 மணி நேரம் கடந்தும் அவர் அபாயக்கட்டத்தைக் கடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி, ஜெ.அன்பழகன் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் தலைமை மருத்துவரைத் தொடர்புகொண்டு அன்பழகனின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓமந்தூரார் டீன் நாராயண பாபுவுடன் மருத்துவமனைக்குச் சென்று ஜெ.அன்பழகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
''தமிழக முதல்வர் காலையிலேயே ரேலா மருத்துவமனை தலைமை மருத்துவரைத் தொடர்புகொண்டு அன்பழகனின் உடல் நிலை எவ்வாறு இருக்கிறது இன்னும் அரசின் உதவி என்ன தேவைப்படுகிறது, சட்டப்பேரவை உறுப்பினர் உடல் நிலை தேறி வரவேண்டும் என்கிற அவாவை வெளிப்படுத்தினார்.
முதல்வரின் உத்தரவுப்படி அவர் உடல்நிலை குறித்து நேரில் மருத்துவமனைக்குச் சென்று நான் நலம் விசாரித்தேன். என்னுடன் ஓமந்தூரார் டீன் நாராயணபாபு உள்ளிட்ட உயர் மருத்துவ அதிகாரிகள் வந்தனர். தலைமை மருத்துவர் உள்ளிட்டோரிடம் 20 நிமிடத்திற்கு மேலாக அன்பழகன் உடல் நிலை குறித்தும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் நான் ஆலோசனை நடத்தினேன். அவரது மகனிடமும் நலம் விசாரித்தேன். அவர் முதல்வருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
வதந்திகள் கிளம்புவது குறித்து தலைமை மருத்துவர் விளக்கம் அளிப்பார்''.
இவ்வாறு விஜயபாஸ்கர் பேசினார்.
பின்னர் ரேலா மருத்துவமனை தலைமை மருத்துவர் தெரிவித்ததாவது:
“வதந்திகள் பரவி வருகின்றன. அதை யாரும் நம்பாதீர்கள். 3 நாளைக்கு முன் திருவல்லிக்கேணி எம்எல்ஏ அன்பழகன் அட்மிட் ஆனார் . வரும்போதே மூச்சுத்திணறலோடு அழைத்து வரப்பட்டார். அவருக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டது. 24 மணி நேரம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மூச்சுத்திணறல் ஆக்சிஜனால் கட்டுப்படுத்த முடியாததால் வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்பட்டது.
ஆரம்பத்தில் 80 சதவீதம் ஆக்சிஜன் வென்டிலேட்டர் சிகிச்சை மூலம் கொடுக்கப்பட்டது. தற்போது 45 சதவீதமாக உள்ளது. அன்பழகன் 15 ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் அதற்குரிய மாத்திரைகள் எடுத்து வருகிறார். அதனால் பயந்தோம். ஆனால் தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது. இன்று காலையில் முதல்வர் என்னிடம் பேசினார். சுகாதாரத் துறை அமைச்சரும் நேரில் வந்து ஆலோசனை செய்தார்.
ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னேற்றம் என்று சொன்னால் கோவிட் குறித்து முழுவதுமாக ஆய்வு முடியாத நிலையில் ஒரு வாரம் கழித்து நிலைமை மீண்டும் கூட மோசமடையலாம். அதெல்லாம் இல்லாமல் அவர் உடல் நிலை தேறவேண்டும். அதற்கான சிகிச்சையை அளித்து வருகிறோம்.
அரசு எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தருகிறது. தேவையான மருந்துகள் தருவதாக அரசு சொல்கிறது. தயவுசெய்து வதந்திகளை நம்பாதீர்கள். வாட்ஸ் அப்பில் வருவதை நம்பாதீர்கள். நாங்களும், அரசும் வெளிப்படையாக இருந்தால் மக்களுக்கு நம்பிக்கை வரும். நாங்கள் வெளிப்படையாக இருக்கவே விரும்புகிறோம்”.
இவ்வாறு ரேலா மருத்துவமனை தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
46 mins ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
க்ரைம்
5 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago