ஆவின் மாதவரம் பால் பண்ணையில் பணிபுரியும் 300 பணியாளர்களுக்கு இடையே 10 நபர்களுக்கு குறைவானவர்களுக்கே தொற்று இருந்தது அறியப்பட்டது என, ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆவின் நிறுவனம் இன்று (ஜூன் 3) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"ஆவின் தமிழக மக்கள் வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத இடத்தை பிடித்திருக்கிறது என்பது நீங்கள் எல்லாம் அறிந்ததே. எவ்வளவு இடர்பாடு காலத்திலும் பாலை உங்களுடைய இல்லம் தேடி சேர்ப்பது தலையாய கடமையாக நினைத்து நாங்கள் அதை செய்துகொண்டிருக்கிறோம். நீங்கள் இரவில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கும் போது, நாங்கள் அதே வேளையில் இரவில் கடுமையாக உழைத்து பாலை பாக்கெட்டில் அடைத்து அதிகாலை 5 மணிக்குள் பாலை உங்கள் இல்லங்களில் சேர்ப்பதற்கு நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நெருக்கடி காலத்தில் பெரும்பாலான முதன்மை தனியார் பால் பண்ணைகள் தங்களது செயல்பாடுகளை முடக்கி விட்ட நிலையிலும், தற்போது ஆவின் நிறுவனம் மே 31 அன்று அதிகபட்சமாக 37.24 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. ஜூன் 2 அன்று 24.78 லட்சம் லிட்டர் ஆவின் பால் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதார பணியாளர்கள், காவல் துறை மற்றும் மருத்துவர்கள் போல ஆவின் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களும் ஒரு முன்னிலை போராளியாக இருந்து, இந்த கரோனா தொற்றை எதிர்த்து போராடிக்கொண்டு மக்களுக்கு ஒரு தரமான பாலை, இன்றியமையாத பாலை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வழங்க போராடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த காலகட்டத்தில் எங்களுடைய உற்சாகத்தை குலைக்கும் வண்ணம் சில தவறான செய்திகள் பரவி கொண்டிருக்கிறது. மாதவரத்தில் 250 தொழிலாளர்களுக்கு கரோனோ தொற்று வந்து விட்டது என்ற பொய்யான செய்தியை பரவி கொண்டிருக்கிறது. இந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
இது போன்ற பொய்யான செய்திகள் எங்களுடைய தொழில் போட்டியாளர்கள் மற்றும் குழப்பத்தை விளைவிக்கும் சமூக விரோதிகளால் தவறான வதந்திகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இது முற்றிலும் தவறான செய்தி. அத்தனை தொழிலாளர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.
ஆவின் மாதவரம் பால் பண்ணையில் பணிபுரியும் 300 பணியாளர்களுக்கு இடையே 10 நபர்களுக்கு குறைவானவர்களுக்கே தொற்று இருந்தது அறியப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சார்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். பலரும் குணமடைந்து பணிக்குத் திரும்பி உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வருகின்றனர். அதில் ஒரு நபர் எங்கள் ஆப்பரேட்டர் ஒருவர் கரோனோ தொற்று ஏற்பட்டு ஒரு மாததிற்கு முன்பாகவே நோய் கண்டு அறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு சுகாதார பணியாளர்களும், காவல் துறை மற்றும் மருத்துவர்கள் போல முன்னனியில் நின்று நோய் எதிராக போர் புரிகின்ற போராளிகள் சிலர் எப்படி பாதிப்புக்கு உள்ளாகி இறக்கின்றார்களோ, ஆவின் நிறுவனத்தைச் சார்ந்த ஒரு ஆப்பரேட்டர் நோய் காலத்தில் அத்தியாவசிய பொருளான பாலை கொடுப்பதற்காக தன் கடமையை செய்து இறந்து விட்டார். அவருடைய இழப்பு எங்களுக்கு மிக பெரிய சோகத்தை கொடுத்தாலும் நாங்கள் உங்களுக்காக மனம் தளராமல் எங்களுடைய கடமையைச் செய்து கொண்டிருக்கிறோம்.
எனவே, மக்களாக நீங்கள் உண்மையை புரிந்து கொண்டு ஆவினுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். ஆவின் நிர்வாகம் சுகாதாரத்தை பேணுவதற்காக அரசின் வழிகாட்டுதல்கள் முழுமையாக கடைப்பிடித்து தரமான பாலை குறிப்பிட்ட நேரத்தில் பாலை அளிப்பதற்கு முழு மூச்சாக வேலை செய்துக்கொண்டிருக்கிறோம். எனவே, தொழில் போட்டியாளர்கள் மற்றும் சமூக விரோதிகள் பரப்புகின்ற பொய் செய்தியை நம்ப வேண்டாம். தொடர்ந்து ஆவினுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அன்புடன் ஆவின் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது"
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
8 hours ago