மத்திய அரசே ஆன்லைன் வகுப்பை ஊக்குவிக்கும்போது மாநில அரசு தடை போடுவதா? அனைத்து பள்ளிகள் சங்கம் கண்டனம்

By செய்திப்பிரிவு

உயர் நீதிமன்றங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று கூறியுள்ளன. அதற்கான கட்டணம் கூட பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆன்லைன் வகுப்புக்குத் தடைவிதிப்பதாகக் கூறுவதா? என அனைத்து பள்ளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

''பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தனியார் பள்ளிகள் இணையதள வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இச்செய்திக்கு தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் சார்பில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்கின்றோம்.

60 நாட்களுக்கும் மேலாக தமிழக பள்ளிக் கல்வி மாணவர்கள் கரோனா எனும் கொடிய நோய் மற்றும் ஊரடங்கு காரணமாக வீட்டுச் சிறையில் முடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் படித்ததை மறந்து விட்டார்கள். கற்பதை நிறுத்திக் கொண்டார்கள்.

அதை மீட்டெடுப்பதற்காக தனியார் பள்ளிகள் பெற்றோரிடமோ மாணவரிடமோ எந்தவித கல்விக் கட்டணமும் பெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதற்கு முன் கல்வி அமைச்சரே ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று கூறியுள்ளன. அதற்கான கட்டணம் கூட பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. மத்திய அரசின் சிபிஎஸ்இ கல்வி வாரியம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை செய்தி வெளியிட்டிருப்பது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், பொதுமக்களிடையே மிகுந்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

குடிப்பதற்குத் தடையில்லாமல் படிப்பதற்குத் தடை போட்ட ஒரே அரசு தமிழக அரசாகத்தான் இருக்கும். நாடெல்லாம் மதுக்கடைகளைத் திறந்துவிட்டு கல்விக் கோயிலை மட்டும் திறக்காமல் தடை போட்டு விட்டு பலமுறை தேர்வுகளத் தள்ளிப்போட்டுப் படிப்பதற்கும் தேர்வுக்குத் தடை போட்டு பள்ளிகளுக்கு சீல் வைக்கும் அவல நிலையில் தமிழகம் உள்ளதைக் கண்டு வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பரிசீலிக்க வேண்டும். ஆன்லைன் எஜுகேஷன் தருவதால் அரசுக்கு ஒரு பைசா கூட நஷ்டமில்லை. தனியார் பள்ளி நிர்வாகிகள் அதற்காக எந்தவிதக் கட்டணமும் யாரிடமும் பெறுவதில்லை. மன உளைச்சலில் இருக்கக்கூடிய மாணவனுக்கு ஒரு மாற்றத்தை தந்து கல்வி கற்பதை உறுதி செய்கின்றனர்.

தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி நடத்துகிறது. ஸ்மார்ட்போன் வழங்குவதாகவும் ஸ்மார்ட் போர்டில் இனிமேல் 3000 பள்ளிகளில் கல்வி நடத்துவதாகவும் ஆன்லைனில் எ‌ஜுகேஷன் தருவதாகவும் தொடர்ந்து அமைச்சர் எல்லா செய்தியாளரிடமும் நாள்தோறும் சொல்லி வருவதை இந்த நாடே அறியும்.

இந்தச் சூழ்நிலையில் எந்த பாதிப்பும் யாருக்கும் இல்லாத நிலையில் ஏன் ஆன்லைன் எஜுகேஷன் முறையைத் தடை செய்ய வேண்டும். வீட்டிலேயே ஒவ்வொரு மாணவனும் தனித்தனியாகப் படிப்பதால் யாருக்கு என்ன நஷ்டம், என்ன நோய் தொற்று ஏற்பட்டது, எதற்காக தனியார் பள்ளி நிர்வாகிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற கேள்விக் கணைகளை எங்கள் பள்ளி நிர்வாகிகள் கேட்டு வருகிறார்கள்.

நாங்கள் என்ன குற்றம் செய்தோம், இதற்காக எங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கும், அரசு எங்களுக்கு உதவ வேண்டும். எந்த உபத்திரவமும் தரக்கூடாது. தனியார் பள்ளியில் படிக்க கூடிய மாணவன் மட்டும் நன்றாகப் படித்து அரசுப் பள்ளியில் படிக்க கூடிய மாணவனை படிக்க கூடாது என்று நாங்கள் கெடுக்கவில்லை.

நீங்களும் நன்றாக முயற்சித்து அரசுப் பள்ளியை மேம்படுத்தினால் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. எத்தனை நாள் தான் எங்களை எடுப்பார் கைப்பிள்ளையாக மூன்றாம் தர குடிமக்களாக நடத்துவீர்கள் என்ற வேதனைகளை எங்கள் பள்ளி நிர்வாகிகள் வெளிப்படுத்துகிறார்கள்.

தயவுசெய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மீண்டும் ஒருமுறை நன்றாக எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து தாங்கள் போட்டுள்ள ஆன்லைன் எஜுகேஷன் நடத்தக்கூடாது எனும் தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால் தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து மாபெரும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டிய சூழலை தயவுசெய்து உருவாக்கி விடவேண்டாம் என்று அன்போடு வேண்டுகின்றோம்''.

இவ்வாறு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

கருத்துப் பேழை

41 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

25 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 mins ago

மேலும்