முதியோர், பார்வையற்றோர் என ஆதரவற்ற 70 பேருக்கு தினமும் வயிறார மதிய விருந்து: திருச்சி பாரதியின் நெகிழவைக்கும் சேவை

By ஜி.ஞானவேல் முருகன்

முதியவர்கள், பார்வையற்றவர்கள், கூலித்தொழிலாளர்கள் என்று ஆதரவற்ற நிலையில் இருக்கும் 70 பேருக்கு தினமும் தன் வீட்டில் வாழை இலை போட்டு மதிய உணவு பரிமாறி வருகிறார் திருச்சியை சேர்ந்த பாரதி. அவர்களை தன் அப்பா, அம்மாவாகவே கருதும் அவர், ‘இது அன்னதானம் அல்ல. ஒரு பிள்ளையின் கடமை’ என்று கூறி நெகிழ்கிறார்.

திருச்சி பீமநகரை சேர்ந்தவர் பாரதி (45). திருமணமாகாத இவர் தன் வீட்டின் முன்புறம் இருக்கும் அறையில் ஆதரவற்ற முதியோர், பார்வையற்றோர், கூலித் தொழிலாளர் உட்பட அடித்தட்டு மக்களுக்கு தினமும் உணவு வழங்கிவருகிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக இச்சேவையில் ஈடுபட்டுவரும் பாரதி, உணவருந்த வரும் முதியோர்களை தன் பெற்றோராகவே பாவிக்கிறார்.

நண்பகல் 12 மணி முதல் பாரதியின் வீட்டுத் திண்ணையில் முதியவர்கள் வந்து அமர தொடங்குகின்றனர். சமையல் பணி முடிந்தவுடன் சரியாக மதியம் 1 மணிக்கு சாப்பிட அழைக்கிறார். 12 பேர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிடக்கூடிய சிறிய அறை என்பதால், மற்றவர்கள் காத்திருக்கின்றனர்.

தலைவாழை இலை போட்டு இனிப்புடன் உயர்ரக அரிசி சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம் என தினமும் விருந்து போலவே பரிமாறுகிறார். சாப்பிட்டு முடித்ததும் கைகழுவவும் உதவுகிறார். பார்வையற்றவர்கள் தங்கள் காலணியை அணிந்து செல்லும் வரை உடனிருக்கிறார்.

இது மட்டுமின்றி தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களின்போது சாப்பிட வரும் முதியோர்களுக்கு வேஷ்டி, சேலை மற்றும் இனிப்புடன் உணவு வழங்குகிறார். இவரது சேவையை பார்த்து பாராட்டுவதோடு, பலர் உதவியும் செய்கின்றனர்.

இதுபற்றி ‘தி இந்து’விடம் பாரதி கூறியதாவது:

‘‘நான் சம்பாதிக்கும் காலக்கட் டத்தில் என் அப்பா, அம்மா இறந்துவிட்டனர். ஆரம்பத்தில் வீடு உள்அலங்காரத் தொழில் செய்தேன். ஏனோ மனம் அதில் ஈடுபடவில்லை. பிள்ளைகள் இருந் தும் முதியவர்கள் பலர் சாலைகளில் சுற்றித்திரிந்தது உறுத்தலாக இருந்தது. என் பகுதியில் இருக்கும் சில ஆதரவற்ற முதியோருக்கு உணவு வாங்கிக் கொடுத்தேன். நாட்கள் ஆகஆக வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆதரவு இல்லாமல், ஒழுங்காக உணவு கிடைக்காமல் இத்தனை பேர் இருக்கிறார்களா என்று அதிர்ச்சி அடைந்தேன். முழுநேரமாக இந்த சேவையில் ஈடுபடுவது என்ற முடிவுக்கு வந்தேன். வீட்டின் கீழ் பகுதியில் இருக்கும் 2 அறைகளை அவர்களுக்காகவே ஒதுக்கினேன். தற்போது ஒரு அறையில் சமையல். இன்னொரு அறையில் சாப்பாடு.

வயதானவர்கள் சாப்பிடும் உணவு என்பதால் சமைப்பதிலும் மிக கவனமாக இருப்பேன். 2004-ல் இந்த சேவையை நான் தொடங்கியது முதலே புஷ்பவள்ளி என்ற மூதாட்டிதான் சமைக்கிறார். தினமும் 70 பேருக்கு மேல் சாப்பிடுகின்றனர். மதியம் 3 மணிக்கு உணவு தீர்ந்துவிடும். அதன் பிறகும் யாராவது வந்தால்கூட உடனே அடுப்பை பற்றவைத்துவிடுவோம். இதை அன்னதானமாக நான் நினைக்கவில்லை. சாப்பிடுபவர் கள் எல்லோரையும் என்னை பெற் றெடுத்த அப்பா, அம்மாவாகவே கருதுகிறேன். அப்பா, அம்மாவுக்கு சோறு போடுவது எப்படி தானமாகும். இதை கடமையாகக் கருதி செய்துவருகிறேன்’’ என்றார்.

இதை அன்னதானமாக நான் நினைக்கவில்லை. சாப்பிடுபவர்கள் எல்லோரையும் என்னை பெற்றெடுத்த அப்பா, அம்மாவாகவே கருதுகிறேன்.

பாரதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்