'கரோனா காமெடி': முகக்கவசமான இறைச்சிக் கடை பில்; ரூ.100 அபராதம் விதித்த புதுச்சேரி போலீஸ்

By அ.முன்னடியான்

கரோனா வைரஸ் எப்போதும் சங்கடத்தைக் கொடுத்தாலும் ஆங்காங்கே கரோனாவை ஒட்டி சில நகைச்சுவை சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ட்ரோனைக் கண்டு ஓடும் இளைஞர்கள், கரோனாவைக் கண்ணில் காட்டச் சொல்லி தகராறு செய்யும் இளைஞர் என்ற பட்டியலில் இணைந்துள்ளார் புதுச்சேரி நபர்.

முகக்கவசம் இல்லாததால் இறைச்சிக் கடை பில்லை வாயில் கவ்வியபடி வந்து போலீஸாரை சிரிக்க வைததோடு ரூ100 அபராதமும் விதிக்க வைத்திருக்கிறார் அந்த நபர்.

புதுச்சேரியில் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸாரின் சோதனைக்கு பயந்து ஒருவர் கோழி இறைச்சி கடையில் கொடுத்த பில்லை முகக்கவசமாக பயன்படுத்திய சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ரூ.100 அபராதம் விதித்த போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 3 ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் மற்றும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுமாறு மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் காவல்துறையினர் ரூ.100 அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அரசின் உத்தரவை ஏற்று புதுச்சேரியில் பெரும்பாலானோர் தற்போது முகக்கவசம் அணிந்து வெளியே வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் முக்கவசம் அணியாமல் வெளியே வருவதும், போலீஸாரிடம் சிக்கும்போது தாம்பூல பை, பாலீதீன் பைகளை முகத்தில் மாட்டிக்கொண்டு சுற்றி வரும் சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது. லாஸ்பேட்டை காவல்நிலைய போலீஸார் சிவாஜி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரியவே, அவரை போலீஸார் மடக்கி நிறுத்தினர்.

அப்போது அந்த நபர் போலீஸாரின் சோதனைக்கு பயந்து முகக்கவசத்துக்கு பதிலாக கோழி இறைச்சி கடையில் கொடுத்த பில்லை முகக்கவசாக வாயில் கவ்வியபடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் முகக்கவசம் அணியாததற்கு அந்த நபரிடம் ரூ.100 அபராதம் வசூலித்து எச்சரித்து அனுப்பினர்.

இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ‘‘போலீஸார் அந்த நபரிடம் கோழி இறைச்சி வாங்குவதற்கு காசு உள்ளது. ஆனால் உங்கள் உயிரை பாதுகாக்க பயன்படும் முகக்கவசம் வாங்க காசு இல்லையா? என கேள்வி எழுப்புகின்றனர்.

அதற்கு அந்த நபர், ஐயா நான் ரூ.50 க்கு இறைச்சி வாங்கினேன். முகக்கவசத்தை மறந்து வீட்டில் வைத்துவிட்டேன் என்றும், சாரி என்றும் கேட்கிறார். போலீஸார் அந்த இறைச்சிக்கடை பில்லில் இருந்தே தொற்று பரவும், கைக்குட்டை கூட இல்லையா என்று கேட்டு அந்த நபரை ஓரங்கட்டுவது பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

தமிழகம்

1 min ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

48 mins ago

வாழ்வியல்

39 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்