தமிழகத்தில் இதுவரை 683 பேரிடம் இருந்து 3,761 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையம் சார்பில் உலக உறுப்புதான தின நிகழ்ச்சி இன்று நடந்தது.
சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அமலோற்பவநாதன், மருத்துவமனை டீன் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த கையேட்டினை வெளியிட்டு, உறுப்பு தானம் வழங்கியவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், ''முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர். இந்த திட்டத்தை அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தியதால் இதுவரை ரூ.903 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மரணத்தின் விளிம்பில் தனியார் மருத்துவமனைகளால் கைவிடப்பட்டவர்களைக்கூட அரசு மருத்துவமனைகள்தான் காப்பாற்றுகின்றன.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னோடி திட்டமாக உறுப்பு மாற்று சிகிச்சைகளை முறைப்படுத்தவும், வகைப்படுத்தவும் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் என்ற அமைப்பை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்.
683 பேர் உறுப்பு தானம்
உலகில் முதல்முறையாக மூளைச்சாவு ஏற்பட்டவர்களை பராமரிப்பதற்கான தனிப்பிரிவு மையம், ஸ்டான்லி மருத்துவமனையில் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 185 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உயிருக்கு போராடியவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தில் 42 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. ஸ்டெம் செல் ஆராய்ச்சிக் கூடமும் மையத்துடன் இணைந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை மூளைச்சாவு அடைந்த 683 பேரின் உடல் உறுப்புகளை அவர்களின் உறவினர்கள் தானம் அளித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 144 இதயங்கள், 69 நுரையீரல்கள், 635 கல்லீரல்கள், 1,233 சிறுநீரகங்கள், 4 கணையங்கள், 2 சிறுகுடல், 618 இருதய வால்வுகள், 1,032 விழி வெண்படலங்கள் (கண்கள்), 22 தோல், 2 ரத்த நாளங்கள் என மொத்தம் 3,761 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
7 hours ago