தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வந்தது. மத்திய அரசு அந்த நிதி வழங்குவதை நிறுத்திக்கொண்டதால், மாநில அரசுகள் அதை கண்டுகொள்ளவில்லை. அதேபோல் அயல்நாடு சென்று உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பும் இப்போது பறிபோய்க்கொண்டிருக்கிறது என நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேசினார்.
சமூகநீதி அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திருமாவளவன் பேச்சு வருமாறு:
"சமத்துவத்தை வென்றெடுப்பதே சமூக நீதியின் நோக்கம். எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஆகியோருக்கு நீதி கிடைக்க அதன் மூலம் சமத்துவத்தை நிலைநாட்ட இந்த துறை பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், சமூகநீதிக்கு குழி தோண்டும் வகையில், இங்கே நீதிமன்றங்கள் உட்பட நிறுவனங்கள் செயல்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
அண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. உத்ரகாண்ட் அரசுக்கும், முகேஷ் குமார் என்பவருக்கும் இடையேயான வழக்கில், அந்த தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் “வேலைவாய்ப்பு என்பது அடிப்படை உாிமையில்லை. மாநில அரசுக்கோ, மத்திய அரசுக்கோ அதை நிறைவேற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது, நீதிமன்றம் அப்படி ஆணையிட முடியாது” என்ற தீர்ப்பை வழங்கியது.
இதுகுறித்து அண்மையில் நமது சமூகநீதித்துறை அமைச்சர் கலோட் அவர்களை நேரிலே சந்தித்து மனு கொடுத்தோம். உத்தரகாண்ட் அரசு மற்றும் முகேஷ்குமார் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது, வேலைவாய்ப்பை பறிக்கக்கூடியது. ஆகவே, உடனடியாக மத்திய அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கை தொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
இதுகுறித்து 1976ல் கேரள மாநில அரசுக்கும் என்.எம்.தாமஸ் ஆகியோருக்கும் இடையிலான வழக்கில் 7 நீதிபதிகள் கொண்ட constitution bench அளித்த தீர்ப்பு செக்ஷன் 16 குறித்து விளக்குகிறது. “Article 16 will have to read as whole and article 16/4 is not an exemption but merely an emphatic statement of concordant and principle stated in 16/1”. 16/1, 16/4 ஆகியவற்றை ஒரே செக்ஷனாக இணைத்துப்பார்க்க வேண்டும்.
அப்படி பார்க்கிறபோது,வேலைவாய்ப்பு என்பது கட்டாயமான ஒன்று. மத்திய, மாநில அரசுகள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது. 7 பேர் கொண்ட constitution bench வழங்கிய தீர்ப்பு முதன்மையானது, அடிப்படையானது, வலிமையானது.ஆனால், அண்மையில் வழங்கிய தீர்ப்பு அந்த வேலைவாய்ப்பை,சமூக நீதியை கேள்விக்குள்ளாக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதால் மத்திய அரசு உடனடியாக அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு தொடுக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும், இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கென்று சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் அதனை அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில், தேசிய சட்ட ஆணையம் தயாரித்து மத்திய அரசிடம் அளித்துள்ள வெறுப்புக்குற்றங்கள் தொடர்பான மசோதாவை உடனடியாக சட்டமாக்க வேண்டும். இன்றைக்கு நாட்டில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் விதைக்கப்படுகிறது.
அதனால், வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கிற வெறுப்புக் குற்றங்கள் தொடர்பான மசோதாவை உடனடியாக சட்டமாக்க வேண்டும் என்று நான் அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். திட்டக் கமிஷனை கலைத்துவிட்டு நிதி ஆயோக் கொண்டு வந்ததன் மூலம் schedule caste sub plan, tribal sub plan ஆகிய துணை திட்டங்களை மத்திய அரசு கைவிட்டுவிட்டது.
இதனால் எஸ்.சி., எஸ்.டி.,மக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டே போகிறது. எனவே, ஆந்திராவில் எப்படி இதற்கென்று ஒரு சட்டம் இயற்றியிருக்கிறார்களோ அதேபோல, மத்திய அரசும் இதற்கென சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
அரசாங்கத்தின் அலட்சியத்தால் ஆணவக்கொலைகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. உச்சநீதிமன்றம் இதற்கென சட்டம் இயற்றும்படி உத்திரவிட்டிருக்கிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. எனவே, ஆணவக்கொலைகளை தடுப்பதற்கு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
மேலும், தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டு வந்தது. மத்திய அரசு அந்த நிதி வழங்குவதை நிறுத்திக்கொண்டதனால், மாநில அரசுகள் அதை கண்டுகொள்ளவில்லை. அதேபோல் அயல்நாடு சென்று உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பும் இப்போது பறி போய்க் கொண்டிருக்கிறது. எனவே, தயவு கூர்ந்து போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் மற்றும் அயல்நாடுகளில் உயர்கல்வி படிப்பதற்கான நிதி உதவியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தலித்துகள் இந்த நாட்டில் ஒடுக்கப்படுவது மட்டுமின்றி தலித் ஆதரவாளர்களும் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள். பீமா கோரேக்கான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை தொடர்ந்து சட்ட விரோதமாக சிறையில் வைத்துள்ளது. மகாராஷ்டிரா அரசு அவர்களுக்கு ஜாமின் வழங்க முன்வந்த நிலையில் அந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, இந்த வழக்கை ரத்து செய்வதுடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்."
என இன்று நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
ஓடிடி களம்
16 mins ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago