எல்.மோகன்
தமிழகத்தில் 2004-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்த கடற்கரை கிராம மக்கள் அப்படி ஒரு துயரம் நிகழும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். 2004 டிச.26-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமியால் ராட்சத அலைகள் சீறி எழுந்தன.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, சென்னை, கடலூர் மாவட்டங்களின் கடற்கரைப் பகுதிகளில் பல ஆயிரம் மக்களை கடல் அலை வாரிச்சுருட்டிச் சென்றுவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 1,017 பேரின் உயிரை சுனாமி பறித்துவிட்டது.
சுனாமி தாக்கி 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதில்தங்கள் உறவுகளை பறிகொடுத்தவர்கள், இன்னும் அந்த சோகத்தில் இருந்து மீளவில்லை. வாழ்க்கைத் தரத்திலும் அவர்கள் முன்னேற்றமடையாத நிலையிலேயே உள்ளனர்.
அடிக்கடி இயற்கை சீற்றங்கள்
கன்னியாகுமரி கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் சுனாமியால் உறவினர்களை இழந்த மீனவர்சேவியர் கூறியதாவது: சுனாமிக்குபிறகு கன்னியாகுமரி கடல் பகுதிகளில் அடிக்கடி இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. வானிலை எச்சரிக்கை மற்றும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கை அறிவிப்புகளால் மாதத்தில் 10 நாட்கள் வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. ஆழ்கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்களாலும் அடிக்கடி மீன்பிடி பணி பாதிக்கப்படுகிறது. சுனாமியை அடுத்து, 2017-ல் வீசிய ஒக்கி புயல் கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களை கடுமையாக பாதித்தது.
உறவுகளை இழந்த குடும்பங்கள்
சுனாமி மற்றும் ஒக்கி புயல் பாதிப்பின்போது அரசு நிதியுதவி செய்தாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் கடல் தொழிலுக்கு சென்று வருமானம் ஈட்டிக் கொடுத்த தந்தை, சகோதரன் போன்ற உறவுகளை இழந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதுவரை மீள முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் வீட்டுப் பெண்கள் அன்றாடம் தலைச்சுமையாக மீன்களை சுமந்து விற்பனை செய்து குழந்தைகளை கரைசேர்த்து வருகின்றனர்.
பேரிடர்கள் நிகழும்போது தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும். கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் உள்ளது. ஆனால், மீனவர்களின் மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர் இல்லை. இங்கு நிரந்தர பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்க வேண்டும் என்றார் அவர்.
மீட்பு குழு அவசியம்
குளச்சல் மீனவர் ஜோசப் கூறியதாவது: கடலில் படகை செலுத்தமுடியாத வகையில், கடல் உள்நீரோட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த 3 மாதங்களாக இயற்கை சீற்றங்களால் 80 சதவீத படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
சுனாமி ஏற்பட்டு 14 ஆண்டுகள் கடந்தாலும், இயற்கை பேரிடர் நிகழ்ந்தால் உயிர் பாதுகாப்பு என்பது இன்றுவரை கேள்விக்குறிதான். மீனவர்களின் பாதுகாப்புக்கு நவீன உபகரணங்களை வழங்க வேண்டும். மீனவர்கள் அடங்கிய மீட்பு குழுவை அரசு அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 mins ago
தமிழகம்
49 mins ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago