கனமழை காரணமாக ஏரி நிரம்பி வருவதால் வேடந்தாங்கலுக்கு மீண்டும் பறவைகள் வருகை: சீசன் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

By கோ.கார்த்திக்

வேடந்தாங்கல் சரணாலய ஏரி கனமழையால் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் சரணாலயத்துக்கு 6 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் மீண்டும் வந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பறவைகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் கிராமத்தில், 73 ஏக்கர் பரப்பளலான ஏரி அடர்ந்த மரங்களுடன் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவம்பர் தொடங்கி ஜூன் மாதம் வரை பறவைகளுக்கு ஏற்ற சூழல் நிலவும்.

அதனால், பல்வேறு வெளிநாடுகள் மற்றும் உள்ளூரில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள், இனப்பெருக்கத்துக்காக இங்கு வந்து, ஏரியில் உள்ள மரங்களில் தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறித்து மீண்டும் தாயகத்துக்கு திரும்பும்.

இந்நிலையில், கடந்த ஆண்டில் வேடந்தாங்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் போதிய மழையில்லாததால், சரணாலய ஏரி நீர்வரத்து இன்றி வறண்டதால், பறவைகள் வரத்து குறைந்தது. மேலும், சீசனுக்கு வந்த பறவைகள் அனைத்தும் மேல்மருவத்தூர் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தங்கியதால், வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். பல ஆண்டுகளாக பறவைகளின் நலனுக்காக பட்டாசு வெடிக்காமல் இருந்த இக்கிராம மக்கள் பறவைகள் வராததால் கடந்த தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்தனர். இது அனைவரையும் கவலைகொள்ளச் செய்தது.

இந்நிலையில், சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஓரளவுக்கு பெய்த தால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து சுமார் 14 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், இங்கு பறவைகளுக்கு ஏற்ற சூழல் உள்ளது. இதையடுத்து, சரணாலயத்துக்கு மீண்டும் வெளிநாடு மற்றும் உள்ளூர் பறவைகள் வரத்தொடங்கியுள்ளன. தற்போது, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், ஏரியில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக தங்கி, மரக்கிளைகளில் கூடுகட்டத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வனச்சரகர் சுப்பையா கூறும்போது, "சரணாலயத்துக்கு அருகில் இறை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பறவைகள் இங்கு கூடுகட்டி தங்குகின்றன. கடந்த ஆண்டு, மழையில்லாததால் வேடந்தாங்கல் ஏரி வறண்டதோடு அருகில் உள்ள விளை நிலங்களும் பயிர்கள் இன்றி காணப்பட்டதால், பறவைகள் வேறு பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தஞ்சமடைந்தன.

தற்போது கனமழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், சரணாலயத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் தங்கியுள்ளதால் சீசன் தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் பறவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

கருத்துப் பேழை

15 mins ago

சுற்றுலா

52 mins ago

சினிமா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்