பெரிய பாண்டியன் தியாகத்தை மறக்காத பெரிய அதிகாரிகள் : காவலர் வீரவணக்க தினத்தில் நெகிழ்ச்சி

By மு.அப்துல் முத்தலீஃப்

காவலர் வீரவணக்க தினத்தை சடங்குப்பூர்வமாக அனுசரிக்காமல் உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தாரை நலம் விசாரித்தும், நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தும் தங்கள் கடமையை ஆற்றிய இரண்டு பெரிய அதிகாரிகள் குறித்து காவலர்கள் நெகிழ்ச்சியுடன் பேசுகின்றனர்.

தியாகத்துக்கும், உயிரை நாட்டுக்காக அளிப்பவர்களுக்கும் உண்மையான அஞ்சலி அவர்களை ஆண்டுதோறும் நினைவு கூர்வது. அதனையும் கடந்தது அந்த குடும்பத்தினரை சந்தித்து உங்கள் பக்கம் நாங்கள் இருக்கிறோம் என ஆதரவை மனோ ரீதியாக அந்த குடும்பத்துக்கு அளிப்பது. இதன்மூலம் ஒட்டுமொத்த காவலர்களுக்கும் தனது பணியை நிறைவாக செய்யும் எண்ணம் தோன்றும்.

பெரிய பாண்டியன் மகனிடம் பேசும் டிஜிபி

தியாகத்தை மதிப்பதுதான் தியாகம் செய்தவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி. காவல் துறையில் உயிர்நீத்த காவலர்களை நினைவுகூறும் வண்ணம் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாள் அக்.21 அன்று காவல்துறையில் அனுசரிக்கப்படுகிறது. காவல் உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், ஆட்சியர்கள் உயர் அலுவலர்கள் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் அஞ்சலி செலுத்துவார்கள்.

பொதுவாக இந்த நிகழ்வு சடங்குப்பூர்வமாக நிகழும். இந்த ஆண்டு காவல்துறை டிஜிபி திரிபாதி அதை மாற்றியுள்ளார். இன்று காவலர் வீரவணக்க நாள் நிகழ்வில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தார் வந்திருந்தனர். அவர்களிடம் நேரில் சென்ற டிஜிபி அவர்களிடையே உரையாடினார். அவர்களுக்கு தைரியம் சொன்ன அவர் உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டுச் செல்லுங்கள், அல்லது என்னிடம் வாருங்கள் எப்போதும் உதவ காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

பெரிய பாண்டியன் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறும் காவல் ஆணையர்

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முக்கியமான நபர் ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கச் சென்று கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த ஆய்வாளர் பெரிய பாண்டியனின் மூத்தமகன் வந்திருந்தார். அவரும் அஞ்சலி செலுத்தினார். அவரை டிஜிபி அழைத்து பேசி ஆறுதல் சொன்னார்.

இந்நிலையில் மற்றொரு உயர் அதிகாரியான சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வீரவணக்கநாள் நிகழ்வில் கலந்துக்கொண்டப்பின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் , இணை ஆணையர் கபில்குமார், துணை ஆணையர்கள் முத்துசாமி, சுதாகர் ஆகியோருடன் பெரிய பாண்டியன் இல்லத்திற்கு நேரில் சென்றார்.
அங்கு அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

பெரிய பாண்டியன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தார். பெரிய பாண்டியன் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கு சம்பந்தப்பட்ட குற்றவாளி நாதுராம் தலைமையிலான கும்பலைப் பிடிக்க ராஜஸ்தானுக்கு தனிப்படையுடன் சென்றார். உடன் ஆய்வாளர் முனிசேகர் என்பவரும் சென்றிருந்தார்.

கொள்ளையர் கிராமத்தில் அதிகாலையில் கொள்ளைகும்பலை பிடிக்கும் முயற்சியில் முனிசேகர் தவறுதலாக சுட்டக்குண்டு பாய்ந்து பெரிய பாண்டியன் உயிரிழந்தார். தீரன் படத்தில் வருவது போன்ற சம்பவம் என அப்போது அந்த நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டது. பெரிய பாண்டியன் தியாகத்தை நாடே போற்றியது. 48 வயதில் 2 மகன்கள் மனைவியை நிராதரவாக விட்டு மறைந்தார் பெரிய பாண்டியன்.

ராஜஸ்தானுக்கு சென்ற தனிப்படை பெரியபாண்டியன் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.

“எப்போதும் டூட்டி டூட்டி என என் தந்தையை பார்க்கவே முடியாது, ராஜஸ்தானுக்கு செல்லும்போதுகூட தூரத்தில் தெருமுனையில் ஜீப் திரும்பும்போது கடைசியாக அவரைப்பார்த்தேன்” என மூத்த மகன் அழுதுக்கொண்டே கூறியது போலீஸார் வாழ்க்கை எந்த அளவுக்கு குடும்பத்தாருக்கு நேரம் ஒதுக்கமுடியாமல் உள்ள நிலையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.

தீரன் படம் வந்த நேரம் அதன் கதாநாயகன் கார்த்தி போலீஸாரின் நிலையை அறிந்து பெரியபாண்டியன் ஊருக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முன்னர் காவல் ஆணையராக இருந்த திரிபாதியுடன் பெரியபாண்டியன்

காவலர் வீரவணக்க நாள் நிகழ்வில் அவரையும், அவரது குடும்பத்தாரையும் மறக்காத இரண்டு மூத்த அதிகாரிகளின் ஆறுதல் அந்தக்குடும்பத்திற்கும், பெரிய பாண்டியனின் வாரிசுகளுக்கும், இன்று வீரவணக்கநாள் நிகழ்வில் பங்கேற்ற மற்ற காவலர்களின் குடும்பத்தாருக்கும், தமிழக காவலர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

26 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்