அதிமுக அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்று கொண்டிருக்கிறது: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை

அதிமுக அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்று கொண்டிருக்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (அக்.17) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு தற்போது நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக போட்டியிடுகிற காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். இப்படி வெற்றி பெறுவதன் மூலமே தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படுவதோடு, மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட உரிய வாய்ப்பு கிடைக்கும். அதிமுகவினரைப் பொறுத்தவரை பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு, அவை எவற்றையும் நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவதில்லை.

தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து அதிமுக, ஆட்சியில் அமர்ந்தது. கடந்த 2015-ல் ரூபாய் 100 கோடி செலவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அன்றைய முதல்வர் ஜெயலலிதா நடத்தினார். அந்த மாநாட்டில் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு தமிழகத்தில் வரலாறு காணாத தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்புகள் பெருகும் என உறுதி கூறப்பட்டது.

2019 ஜனவரி 25-ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் 3 லட்சம் கோடி முதலீட்டில் 300 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், இந்த முதலீடு காரணமாக எதிர்பார்த்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதா என்றால் மிகுந்த ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி, கடந்த 18 ஜூன் 2019 நிலவரப்படி ரூபாய் 5 ஆயிரத்து 455 கோடி முதலீட்டில் 71 ஆயிரத்து 169 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி அறிவிக்கப்பட்ட முதலீடும் வரவில்லை, வேலைவாய்ப்பும் பெருகவில்லை.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு 84 லட்சம் பட்டதாரிகள் கடந்த பல வருடங்களாகக் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவுப் பணிகளுக்காக 4,600 மனுக்கள் வந்துள்ளன. இதில் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள் மற்றும் பல தகுதிமிக்க இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 9,351 பணியிடங்களுக்காக 20 லட்சம் மனுக்கள் குவிந்திருக்கின்றன. இதன்மூலம் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தை ஆளுகிற அதிமுக அரசு, மத்திய அரசிடம் உரிமைகளைப் போராடிப் பெறுவற்கு துணிவற்ற நிலையில் இருக்கிறது. கடந்த 2015 முதல் 2018 வரை இயற்கை சீற்றங்களால் வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய பாஜக அரசிடம் தமிழக அரசு நான்கு தவணைகளில் கேட்ட மொத்த தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 450 கோடி. இதில் நரேந்திர மோடி அரசு தமிழகத்திற்கு வழங்கியது வெறும் ரூபாய் 3,700 கோடி மட்டுமே. இதன்மூலம் மோடி அரசு தமிழகத்தை எந்த அளவுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வஞ்சிக்கிறது என்பதற்கு வேறு புள்ளி விவரங்கள் தேவையில்லை.

திமுக - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி பதவி விலகிய 2014 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டதா? 2015-ல் மத்திய பாஜக அரசு நீட் தேர்வைத் திணித்தபோது அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் விதிவிலக்கு பெற்றவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.

ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில் திணிக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய இரண்டு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களை அன்று பெற்றிருந்த அதிமுக, மத்திய பாஜக அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கத் துணிவில்லாத காரணத்தால் இன்றைக்கு தமிழக மாணவர்கள் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் நீட் தேர்வில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு பெற்றார்கள் என்ற அவல நிலைக்கு அதிமுக ஆட்சிதான் காரணம்.

இன்றைய அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை படுபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 3 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் 2018-19 இல் அது ரூபாய் 3 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, தமிழக மின் வாரியத்தின் கடன் சுமை ரூபாய் 1 லட்சம் கோடியாக எட்டியுள்ளது.

மேலும், மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ரூபாய் 2 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய மோசமான நிதிநிலையில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட நிதி நிலைமையில் தொழில் வளர்ச்சியை உருவாக்குவதற்கோ, வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கோ எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் அதிமுக அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால், இனி எஞ்சியிருக்கிற ஆட்சிக் காலத்தில் அதிமுக ஆட்சியினால் மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

எனவே, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி ஆர். மனோகரனை வெற்றி பெறச் செய்வதன் மூலமாக 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் நல்லாட்சி அமைந்திட, மக்கள் வாக்குகளை வழங்க வேண்டும்," என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

க்ரைம்

51 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்