மதுரையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் அரசுப் பள்ளிகளில் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கி வருகிறார்.
இதுவரை மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில் 22 அரசுப் பள்ளிகளில் இவர் நூல்கொடை செய்திருக்கிறார். அந்த வரிசையில் மதுரை கொண்டபெத்தான் நடுநிலைப் பள்ளியில் இன்று (புதன்கிழமை) அவர் நூல்கொடை செய்தார்.
இப்பள்ளியில் நூலகம் அமைத்தல் விழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை ராமலட்சுமி முன்னிலை வகித்தார். நூல்கொடை முயற்சியாளர் பேராசிரியை அர்ச்சனா தெய்வா நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்க ஆசிரியர் பீட்டர் பெற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக மாணவர் சந்தோஷ், தாங்கள் மகிழ்ச்சியாக இருந்தாதகவும் தன்னம்பிக்கை அதிகரித்ததாகவும் கூறினார்கள்.
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் அர்ச்சனா தெய்வா (38). இவர் மதுரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். இவர் அரசுப் பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் குழந்தை எழுத்தாளர்களின் புத்தகங்களை கொடையாக வழங்கி வருகிறார். இதுவரை 22 அரசுப் பள்ளிகளுக்கு நூல்களை கொடையாக வழங்கி வருகிறார். மேலும், மே மாதம் வாசிப்பு பட்டறைகள் நடத்தியும், மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக கொண்டபெத்தான் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.தென்னவன் கூறும்போது, "எங்கள் பள்ளியில் நூலகம் அமைக்க ரூ.3000 மதிப்புள்ள புத்தகங்களை பேராசிரியை அர்ச்சனா தெய்வா கொடையாக வழங்கியுள்ளார். பாரதி புத்தகாலயா பதிப்பக புத்தகங்களை வழங்கியிருக்கிறார். மாணவர்களின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப புத்தகங்களை தேர்வு செய்து வழங்கியிருக்கிறார். கொ.மா.கோ.இளங்கோ, விழியன் போன்ற சிறார் இலக்கிய படைப்பாளிகளின் நூல்கள் இருக்கின்றன. புத்தகங்களைப் பிள்ளைகள் ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்தனர். அவர்களின் ஆவலைப் பார்க்கும்போது நிச்சயம் அவர்கள் இந்த புத்தகங்கள் அனைத்தையும் வாசித்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. நூல்கொடை பெற்றதோடு நின்றுவிடாமல் மாணவர்களிடம் நாங்கள் வாசிப்பை ஊக்குவிக்க உள்ளோம்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாடக ஆசிரியர் செல்வம் வழிகாட்டுதலில் மாணவர்கள் தாங்களே நாடகங்களை உருவாக்கி நடித்துக் காட்டினர்.
நாடகம் மூலம் நற்பழக்கங்களை வளர்த்தல் என்ற நோக்கத்தில் நான்கு நாடகங்கள் மாணவர்களாலேயே நடித்துக் காட்டப்பட்டது.
புத்தகங்களைத் தாண்டியும் கற்றலுக்கு வழி இருக்கிறது. அவற்றை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும்போது அவர்கள் இயல்பாகவே பாடங்களைக் கற்பதிலும் ஆர்வம் காட்டுவார்கள்"
வாய்ப்புகளை உருவாக்கித் தந்தால் வாசிப்பார்கள்..
இதுகுறித்து பேராசிரியை அர்ச்சனா தெய்வா, "அரசுப்பள்ளி மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தவிர்த்து மற்ற நூல்கள் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதை அறிந்தேன்.
அரசுப் பள்ளிகளுக்கு நூல்கள் வழங்க முன்வந்தேன். ஆரம்பத்தில் சில தலைமை ஆசிரியர்கள் இதனை ஏற்கவில்லை.
பின்னர் 2016ல் ஒத்தக்கடை அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவன் முன்வந்ததால் நூல்கள் கொடை வழங்க ஆரம்பித்தேன்.
கடந்த 3 ஆண்டுகளில் 22 அரசுப் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளேன்.
இதற்கு எனது நண்பர்கள் உதவி செய்கின்றனர். அதேபோல், மே மாதத்தில் நண்பர்கள் சேர்ந்து 2 நாள் வாசிப்பு பட்டறை நடத்தி ஊக்கப்படுத்துகிறோம். குழந்தை எழுத்தாளர்களின் கதைப்புத்தகங்களையும், படங்களுடன் கூடிய கதைப்புத்தகங்களையும் வழங்கி வருகிறோம்.
சிறுவர்கள் விரும்பும் வகையில் படங்களுடன் கூடிய நூல்களை முதலில் வாசிக்கப் பழக்கப்படுத்துகிறோம். பின்னர் கதை சொல்லிகள் மூலம் கதைகள் சொல்கிறோம்.
இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு திறன்களை வளர்த்து கொள்கின்றனர். இதற்கென முகநூலில் ‘நூல்கொடை’ மூலம் இணைந்துள்ள நண்பர்கள் மூலம் இப்பணியை மேற்கொண்டு வருகிறேன். இதுபோல் நூல்கள் பெற விரும்பும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொண்டால் வழங்கத் தயாராக உள்ளேன்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
இந்தியா
9 mins ago
தமிழகம்
30 mins ago
சினிமா
26 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
50 mins ago
க்ரைம்
56 mins ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago