நிவாரணப் பணிகளில் தோல்வி; மத்திய அரசிடம் நிவாரண நிதி பெற முடியாத முதல்வர் பழனிசாமி பதவியில் நீடிக்கலாமா?- கே.எஸ்.அழகிரி கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதில் பெரும் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இனியும் நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (ஆக.14) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் அதிக முதலீடுகளைப் பெற்று தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக முதலில் ரூபாய் 100 கோடி செலவிலும், பிறகு இரண்டாவது முறையும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முதலீடுகளின் இலக்கு இதுவரை எட்டப்படவில்லை.

தமிழகத்தில் நடைபெற்று வருகிற அதிமுக அரசு மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் எதிர்பார்த்த முதலீடுகள் வரவில்லை. இத்தகைய தோல்வியின் பின்னணி காரணமாக தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை அழைத்துப் பேசி, அதிக முதலீடுகளை பெறப் போவதாக கூறியிருக்கிறார். ஏற்கெனவே நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் தோல்வியடைந்த நிலையில் தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் எத்தகைய பலனை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி குன்றிய காரணத்தால் வேலை வாய்ப்பின்மை கடுமையாக உயர்ந்திருக்கிறது என தேசிய புள்ளியியல் மாதிரி ஆய்வக அறிக்கை கூறியிருக்கிறது. 2011-12 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை 2.2 சதவீதமாக இருந்தது, 2017-18 ஆம் ஆண்டுகளில் 7.6 சதவீதமாக இது உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 84 லட்சமாக இருந்தது, தற்போது ஒரு கோடிக்கு மேல் உயர்ந்திருக்கிறது. ஏற்கெனவே, நம்பிக்கையோடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருந்தவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக புதிதாக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழக அரசு மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் இழந்து வருகிறார்கள்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை எந்தளவுக்கு கடுமையாக தலை விரித்தாடுகிறது என்பதற்கு ஓரிரு உதாரணங்களே போதுமானதாகும். சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் 9351 பிரிவு-4 பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டில் 20 லட்சம் மனுக்கள் குவிந்திருக்கின்றன.

ஒரு பணிக்கு 213 மனுக்கள் வந்துள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் 14 துப்புரவு பணியாளர்களுக்கு 4,600 மனுக்கள் வந்துள்ளன. இதில் பொறியியல் முதுநிலை பட்டதாரிகள், எம்பிஏ, பி.டெக், எம்.டெக் படித்தவர்கள் மனு செய்திருக்கிறார்கள் என்கிற அவலநிலை வெளிப்பட்டுள்ளது. தமிழகத்தில் தகுதிமிக்க பட்டதாரிகளுக்கு உரிய வேலை கிடைக்காததால் துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. இதைவிட, தமிழக ஆட்சியாளர்களுக்கு வேறு அவமானம் இருக்க முடியாது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

தமிழக அரசின் உயர்கல்வித்துறையில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் உள்ள 99 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 41 கல்லூரிகளுக்கு முதல்வர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. இதை அந்த கல்லூரியின் துறை சார்ந்த பேராசிரியர்களே, முதல்வர் பொறுப்பை தற்காலிகமாக வகித்து வருகிறார்கள். கல்லூரி முதல்வர் பதவிகளைக் கூட நிரப்ப முடியாத நிலையில் தமிழக உயர்கல்வித்துறை இருக்கிறது.

உயர்கல்வித்துறை நிர்வாகத்தில் 12 பதவிகளும், 8 பிராந்திய இணை இயக்குநர் பதவிகளும், 3 இணை இயக்குநர் பதவிகளும், 7 இயக்குநர் பதவிகளும் நிரப்பப்படாமல் உள்ளன. உயர்கல்வித்துறை நிர்வாகத்தை நடத்த வேண்டிய இத்தகைய பதவிகளை நிரப்பப்படாமல் இருப்பதால் தமிழக கல்வித்துறை படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாகரீகமற்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார்.

கடந்த காலங்களில் தமிழகத்தில் இயற்கை சீற்றத்தினால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. ஒரு முதல்வர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதுதான் முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கும். ஆனால், தமிழக முதல்வரோ, ஒக்கி புயலாக இருந்தாலும், கஜா புயலாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கோ, உயிரிழந்த மக்களுக்கு இழப்பீடு தருவதற்கோ, மத்திய அரசிடமிருந்து அதிக நிவாரண நிதி பெறுவதற்கோ தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டதில்லை.

தமிழக முதல்வர், நரேந்திரமோடி அரசிடம் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை கேட்ட மொத்த நிவாரண தொகை ரூபாய் 1 லட்சத்து 14 ஆயிரம் கோடி. ஆனால், மத்திய பாஜக அரசு வழங்கியதோ ரூபாய் 4,200 கோடி. தமிழக அரசு கேட்டதற்கும், மத்திய அரசு வழங்கியதற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும், மடுவுக்குமாக உள்ளது. இதை எதிர்த்து பேசுகிற துணிவு தமிழக அரசுக்கு இல்லை.

சமீபத்தில் நீலகிரி மாவட்டமே வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை அறிந்தவுடனே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறச் சென்ற திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் மீது தரக்குறைவான விமர்சனத்தை செய்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை முதல்வர் விமர்சனம் செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

எனவே, தமிழகத்திற்கு முதலீடுகளை பெறுவதிலோ, தொழில் வளர்ச்சியை பெருக்குவதிலோ, வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவதிலோ, மத்திய அரசிடம் அதிக நிதிகளைப் பெற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதிலோ பெரும் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இனியும் நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது", என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

வணிகம்

27 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்