சென்னை
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி அம்மாநிலத்தின் ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணைநிலை ஆளுநர் செயல்பட முடியாது எனக் கூறி, யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்யாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து யூனியன் பிரதேச அரசு வழக்கு தொடராத நிலையில், தனிநபரான எம்எல்ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுக்கும், யூனியன் பிரதேச அரசுக்கும் இடையில் தெளிவான வித்தியாசத்தை அரசியல் சாசனம் தெரிவித்துள்ள நிலையில், தனி நீதிபதி தவறான முறையில் தீர்ப்பளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
52 mins ago
ஜோதிடம்
1 hour ago
தொழில்நுட்பம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago