திருப்பூர் ரயில் நிலையத்தில் உணவுப் பொருள் விற்பனையாளர்களாக வேலை செய்துவந்த வங்கதேசத்தினர் சிலர் தலைமறைவானது குறித்து மத்திய உளவுத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசம் நாட்டைச் சேர்ந்தவர்கள் திருப்பூரில் கைது செய்யப்பட்டுவருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் சட்ட விரோதமாக ஊடுருவும் இவர்கள், அந்நாட்டில் உள்ள தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்களாக இருந்து விட்டால், இந்தியாவுக்குள் பிற தடை செய்யப்பட்ட அமைப்பு களுடன் சேர்ந்து நாச வேலைகளை செய்து விடுவார்கள் என்பதே மத்திய உளவுத்துறையின் அச்சம்.
இதன் காரணமாக, மத்திய உளவுத் துறை போலீஸார் இவர்களது நடமாட்டத்தை தீவிரமாக கண் காணித்து வருகின்றனர். தமிழ கத்தில் ஏற்கெனவே தொழிற்சாலை களில் வட இந்தியர்கள் போர்வை யில் வேலை செய்துவந்தவர்கள், தற்போது மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ்வரும் தற்காலிக உணவுப் பொருள் விற்பனையாளர் வேலைகளில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
சமீபத்தில் மேற்குவங்க மாநிலம் ஹரிதாஸ்பூரில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் வங்க தேசத்திலிருந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியா வுக்குள் வந்தவர் என்பதும், அவரது உறவினர்கள் சிலர் திருப்பூர் ரயில்நிலையத்தில் உணவுப் பொருள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. அதன் அடிப்ப டையில் திருப்பூர் ரயில்நிலை யத்தில் சில தினங்களுக்கு முன் விசாரிக்கச்சென்றோம்.
ஆனால் அதற்கு முன்னதாகவே 12 தொழிலாளர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அவர்களில் சிலர் வங்க தேசத்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். வேலைக்காக போலி ஆவணங்களை அளித் திருக்க வாய்ப்புள்ளது. அதோடு ரயில்நிலையத்தில் உணவுப் பொருள் விற்பனை ஒப்பந்ததாரர் களின் கீழ் உள்ள துணை ஒப்பந்ததாரர்கள் தங்க ளுக்கான ஆள் பற்றாக்குறையை சமாளிக்க முறைப்படி ஆவணங்களைப் பெறாமல் சிலரை வேலைக்கு வைத்திருந்ததும் தெரியவந் துள்ளது. தலைமறைவானவர்கள் பற்றிய தகவல்களை தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
இது தொடர்பாக திருப்பூர் ரயில்நிலையத்தில் உணவுப் பொருட்கள் விற்பனைக் கடை வைத்துள்ள ஒருவரிடம் பேசியபோது, ‘ரயில்நிலையத்தில் 11 கடைகள் உள்ளன. அவற்றில் 10 கடை ஒரு ஒப்பந்ததாரருக்கும், ஒரு கடை மற்றொருவருக்கும் உரியது. இதில் 7 கடைகள் உரிய கட்டணம் செலுத்தி செயல்படுகின்றன. ரயில்வே அனுமதித்துள்ளபடி ஒருகடைக்கு 4 விற்பனையாளர்கள் வீதம் 28 பேர் உள்ளனர்.
தற்காலிக வேலைக்கு வரும் அவர்கள் காவல்துறை அனுமதி மற்றும் மருத்துவ சான்று பெற்று வரவேண்டும். ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அளிக்க வேண்டும். அதற்குப் பிறகே அவர்களுக்கு ரயில்வே சீருடை வழங்கப்பட்டு, வேலைக்கு சேர்க்கப்படுவார்கள். இதில் 6 பேர் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க ஆவணங்கள் இல்லாமல் வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.
இப்போது அவர்கள் இங்கு இல்லை’ என்றார்.
திருப்பூர் ரயில்நிலைய உணவுப் பொருள் விற்பனை கடைகளின் ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, உரிய ஆவணங்களுடன் வருபவர்கள் மட்டுமே வேலைக்கு சேர்க்கப்படுகின்றனர்’ என்றார்.
ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறும்போது, ‘ரயில்வே வர்த்தக பிரிவு அதிகாரிகள்தான் ஆவணங் களைப் பார்த்து, உணவுப் பொருள் விற்பனை செய்யும் பணியாளர் களுக்கான அனுமதியை அளிக்கின்றனர். ஆனால் வேலை செய்யும் பணியாளர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்.
தேவைப்படும்போது அவர்களது அடையாள அட்டை, ஆவணங் களை சரிபார்ப்பது உண்டு. கொல்கத்தாவை சேர்ந்த சிலர் திருப்பூரில் பணிக்கு இருந்தனர். போலி ஆவணங்கள் மூலமாக வங்கதேசத்தவர்கள் வந்திருந்தால் நிச்சயம் சிக்கியிருப்பார்கள்’ என்றனர்.
ஆனால் இவ்விவகாரம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தெரியவே இல்லை என்பதே மத்திய உளவுப்பிரிவினர் அளிக்கும் தகவலாக உள்ளது.
- பெ.ஸ்ரீனிவாசன்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
வேலை வாய்ப்பு
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago