திரிசங்கு நிலையில் ஆசிரியர் கல்வி: ஓராண்டு பி.எட். படிப்பு தொடருமா? - காத்திருக்கும் கல்வியியல் கல்லூரிகள்

By என்.முருகவேல்

ஆசிரியர் கல்வி (பி.எட்.) படிப்பை 2 ஆண்டுகளாக உயர்த்தும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் சூழலில், ஓராண்டு பி.எட். படிப்பு இந்த ஆண்டு தொடருமா என்று கல்வியியல் கல்லூரிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ), ஆசிரியர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த முடிவு செய்து, ஓராண்டு படிப்புகளான பி.எட்., எம்.எட். படிப்புகளை 2 ஆண்டுகளாக உயர்த்துவதாக அறிவித்தது. இதை நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் 2015-16 கல்வியாண்டில் அமல்படுத்தவும் உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள 689 கல்வியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு 70 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர். பட்டப் படிப்பு காலவரம்பை உயர்த்தினால் மாணவர் சேர்க்கை குறையக்கூடும் என்பதால், இந்த உத்தரவை எதிர்த்து சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, பி.எட். பட்டப் படிப்பை 2 ஆண்டுகளாக உயர்த்த கூடுதல் கால அவகாசம் தேவை என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “2 ஆண்டு பி.எட். படிப்புக்காக, ஆங்கிலப் பேச்சாற்றல், யோகா, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடங்கள் உள்ளிட்டவை அடங்கிய பாடத் திட்டத்தைத் தயாரித்துள்ளோம். எனினும், 2 ஆண்டு பாடத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசும், நீதிமன்றமும்தான் முடிவெடுக்க முடியும்” என்றார்.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3-ல் நீதிமன்றம் தொடங்கிய பின்னர்தான், அந்த வழக்கு விசாரணைக்கு வரும். வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்று கூற இயலாத நிலையில், அரசும் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

வழக்கமாக, கல்வியியல் கல்லூரி வகுப்புகள் ஜூலை இறுதியில் தொடங்கும். ஆனால், இந்த வழக்கு காரணமாக இந்தாண்டு ஓராண்டு பி.எட். படிப்பு தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், விண்ணப்பத்தை எப்போது விநியோகிப்பது என்று கல்வியியல் கல்லூரிகள் குழப்பமடைந்துள்ளன.

இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு தெளிவான முடிவை அறிவிக்க வேண்டுமென கல்வியியல் கல்லூரி நிர்வாகங்களும், ஆசிரியர் கல்வி பயில விரும்பும் மாணவர்களும் வலியுறுத்துகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்