பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் பிரகாஷை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் (54). மூட்டு அறுவைச் சிகிச்சை நிபுணர். 2001-ல் இவரது மருத்துவமனையில் வேலை பார்த்தவர் புதுச்சேரியைச் சேர்ந்த கணேசன் (24).
கணேசன், பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாசக் காட்சிகள் இணையதளத்தில் வெளியாயின. இதையடுத்து, அவர் வடபழனி போலீஸில் புகார் கொடுத்தார். அதில், டாக்டர் பிரகாஷ் தன்னை மிரட்டி பல பெண்களு டன் நெருக்கமாக இருக்கச் செய்து வீடியோக்கள் எடுத்ததாகவும், பின்னர், அவற்றை இணையதளத் தில் வெளியிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
போலீஸார் விசாரணை நடத்தி டாக்டர் பிரகாஷ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக சரவணன் (25), விஜயன் (24) நிக்சன் (24) ஆகியோரை கைது செய்தனர். மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்த சித்ரா, வீடியோக்களை எடுத்தது தெரிய வந்தது. ஆனால், அவர் அப்ரூவராக மாறியதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம், 2008-ல் டாக்டர் பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. பிரகாஷுடன் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 3 பேரில் நிக்சனை விடுதலை செய்தும், மற்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிமன்றம் விதித்தது.
இதனிடையே, 2009-ல் தன்னை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் பிரகாஷ் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் மனுவை விசாரித்தனர்.
அப்போது, டாக்டர் பிரகாஷ் தரப்பு வழக்கறிஞர், ‘டாக்டர் பிரகாஷ் சிறந்த மருத்துவ நிபுணர். அறிவுத்திறன் மிக்கவர். அவர் தனது தவறை உணர்ந்து திருந்திவிட்டார். சிறையில் இருந்த காலத்தில் ஆன்மிகம் மற்றும் அறிவியல் தொடர்பாக 100-க்கும் அதிகமான புத்தகங்கள் எழுதியுள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து சிறைத் தண்டனையை அனு பவித்து வருகிறார். எனவே, நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், டாக்டர் பிரகாஷ் இதுவரை அனுபவித்த தண்டனையை முழு தண்டனைக் காலமாக கருதி, நன்னடத்தை காரணமாக விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
13 ஆண்டு சிறைவாசத்தில் 120 புத்தகங்கள்
புழல் சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் பிரகாஷ் எல்லாம் முடிந்தது என்று நினைக்காமல், தண்டனை காலத்தை தனது கற்பனைகளுக்கு உயிர் கொடுக்கும் இடமாக மாற்றி விட்டார். மருத்துவம், ஆன்மிகம், கிரைம் என பல தலைப்புகளில் சுமார் 120 புத்தகங்களை எழுதியிருக்கிறார். இதில் 70-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டு விற்பனையும் ஆகியிருக்கிறது. சிறையில் இருந்து இவர் எழுதிய ஒரு கிரைம் நாவல் திருடப்பட்டு, பிரபல நடிகர் ஒருவர் நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்திருப்பதாகவும் கூறப்பட்டது.
டாக்டர் பிரகாஷின் எழுத்துகளை அசோகன் என்பவர் புத்தகமாக வெளியிட்டு வருகிறார். 'சிறையின் மறுபக்கம்' என்ற புத்தகம்தான் முதலில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ‘வாழ்வதற்கான நூறு வழிகள்’, 'கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்' என பல புத்தகங்கள் வெளிவந்தன. இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணம் குறித்து தலா 4 தொகுதிகளாக புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். சிறையில் இருந்த காலத்தில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பக்கங்களை டாக்டர் பிரகாஷ் எழுதியிருக்கிறார்.
சிற்பங்கள் வடிப்பதிலும் வல்லவர்
‘மாயன்’ கலாசாரத்தை அடிப்படையாக கொண்டு ‘யாமா’ என்ற பிரம்மாண்டமான மனித தலை சிற்பத்தை சிறையில் வைத்தே தயாரித்தார் டாக்டர் பிரகாஷ். இது 9 அடி உயரமும், நான்கரை அடி அகலமும் கொண்டது. சுமார் 250 கிலோ எடையில் பைபர் மூலம் இதை தயாரித்தார். சிறையில் கண்விழித்து இருந்து மூன்றே நாட்களில் அதை தயாரித்தார். டாக்டர் பிரகாஷ் தயாரித்த இந்த யாமா சிற்பம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புழல் சிறை வளாகம், சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம், எழும்பூர் சிறை பஜார் ஆகிய இடங்களில் சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும். இவை அனைத்திலும் டாக்டர் பிரகாஷின் ஓவியங்களும் தவறாமல் இடம்பெறும். இவரது ஓவியங்கள் அனைத்தும் பல ஆயிரங்களுக்கு விற்பனையாகியுள்ளன.
டாக்டர் பிரகாஷ் முடநீக்கவியல் நிபுணராவார். வெளிநாட்டு மருத்துவர்களுக்கே பாடம் நடத்தும் அளவுக்கு அதில் நிபுணத்துவம் பெற்றிருந்தவர். சிறையில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்தக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, தனது துறையில் தற்போதுவரை ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களை உடனுக்குடன் அறிந்து கொண்டார். கைதிகளுக்கு பாடம் நடத்துதல், சிகிச்சை அளித்தல், கவுன்சலிங் கொடுத்தல் என பல நல்ல பணிகளை சிறையில் செய்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வணிகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
க்ரைம்
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago