ஓசூரில் நெடுஞ்சாலையில் குட்டி யானை கார் மோதி பலி

By செய்திப்பிரிவு

ஓசூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற குட்டி யானை ஒன்று கார் மோதி பலியானது.

கர்நாடக மாநிலத்திலிருந்து வெளியேறிய 100க்கும் மேற்பட்ட காட்டுயானைகள், கடந்த சில மாதங்களாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல குழுக்களாக பிரிந்து ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம் உள்ளிட்ட வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராயக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 20 யானைகள், ஓசூர் சானமாவு காப்புக் காட்டிற்கு இடம் பெயர்ந்தன.

இந்நிலையில் அந்த யானைகள் நேற்று கூட்டமாக, சானமாவு காப்பு காட்டிலிருந்து பேரண்டபள்ளி வனப்பகுதிக்கு செல்ல, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை, சுமார் இரவு 10.30 மணியளவில் கடந்தன. அப்போது கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கிச் சென்ற கார், சாலையைக் கடந்து கொண்டிருந்த குட்டியானை மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. காரை ஓட்டி வந்த ஓசூரைச் சேர்ந்த விவேக் காயம் அடைந்தார்.

யானை இறந்துகிடந்த இடத்தில், மற்ற யானைகள் சுற்றி நின்று பிளிறின. சாலை இருபுறங்களிலும் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. தகவலறிந்த ஓசூர் வனத்துறையினர் யானைகள் கூட்டத்தை காட்டிற்கு விரட்டினர்.

யானைகள் காட்டிற்குச் செல்லும் வரை வாகனங்கள் முகப்பு விளக்கு அணைத்து ஓட்ட அறிவுறுத்தினர். இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இறந்து கிடந்த யானையை வனத்துறையினர் கிரேன் மூலம் மீட்டனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு யானை காட்டுப் பகுதியில் புதைக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

குட்டியானை இறந்ததன் காரணமாக காட்டுயானைகள் ஆக்ரோஷமாக சுற்றித் திரிய வாய்ப்பு உள்ளதால் வனத்தை ஒட்டியுள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

8 mins ago

சினிமா

15 mins ago

விளையாட்டு

38 mins ago

வணிகம்

50 mins ago

இந்தியா

52 mins ago

சினிமா

58 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்