திமுக உட்கட்சித் தேர்தலில் குழப்பம்: யாருக்கு செல்வாக்கு? யாருக்கு அதிருப்தி?- ஒரு விரிவான அலசல் ரிப்போர்ட்

By ஹெச்.ஷேக் மைதீன்

திமுக உட்கட்சித் தேர்தலில் கோஷ்டிப் பிரச்சினைகளால், பல்வேறு மாவட்டங்களில் கட்சியின் மூத்த விசுவாசிகளும் நிர்வாகிகளும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நிலையை விளக்கி அறிவாலயத்திலும், கோபாலபுரம் இல்லத்திலும் மனுக்கள் அளித்து வருகின்றனர்.

திமுக உட்கட்சித் தேர்தல் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. கிளை, வட்டம், பகுதி, ஊராட்சி, பேரூர், நகராட்சி, ஒன்றியம் எனப் பல கட்டப் பதவிகளுக்கும், தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள சுமார் 15 மாவட்டங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, மனுக்கள் பெறப்படுகின்றன. இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, பகுதி உள்ளிட்ட பதவிகளில் குறிப்பிட்ட கோஷ்டிகளுக்கு மட்டுமே பதவிகள் கிடைத்துள்ளதாகக் கூறி ஸ்டாலின் ஆதரவாளர்களே வேதனை தெரிவிக்கின்றனர்.

தென்மாவட்டங்களில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தூத்துக்குடி பெரியசாமி, வட மாவட்டங்களில் பொன் முடி, மா.சுப்பிரமணியன், டெல்டா மாவட்டங்களில் டி.ஆர்.பாலு போன் றோரிடம் தொடர்பும் நெருக்கமும் வைத்திருந்த பெரும்பாலானோர் பதவி பெறுவதாகக் கூறப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்கள் பதவி களுக்கு, மொத்தமுள்ள 65 மாவட்டங்களில் யாருக்கு எங்கே பதவி என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, எதிர் தரப்பினர் புகார் கூறுவதுடன், பல இடங்களில் கட்சி அலுவலகத்தையும் முற்றுகையிடும் சம்பவங்கள் நடக்கின்றன.

மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் விசுவாசிகளான பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கண்டோன்மெண்ட் சண்முகம், வில்லி புத்தூர் ச.அமுதன், சங்கரன்கோவில் தங்கவேலு போன்றோரிடம் கட்சியின் பல்வேறு தரப்பினர் அதிருப்தியை தெரிவித்து வருவதாகவும், இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் பலர் வருத்தங்களை பகிர்ந்து கொண்டதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உட்கட்சித் தேர்தல் தொடர்பாக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதலே, திமுக பொருளாளர் ஸ்டாலி னின் ஆதரவாளராக காட்டிக் கொண்டு பலர், கட்சியில் கோஷ்டியாக செயல் படுகின்றனர். இவர்கள் தங்கள் எதிர்தரப்பை வேறு கோஷ்டியாக பார்க்கின்றனர். முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி கட்சியில் இருந்த போது, அழகிரி, ஸ்டாலின் என்று இரு கோஷ்டிகளாகப் பிரித்துப் பார்த்தனர். இப்போது அழகிரி நீக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் தீவிர விசுவாசிகளும் எதிர் கோஷ்டியாகக் கருதப்படுகின்றனர். சில மாவட்டங்களில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் எளிதாக பதவிகளைப் பிடித்துள்ளதாக கட்சியினர் குமுறுகின்றனர்.

இதுகுறித்து ஸ்டாலினிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. இதன் ஒரு கட்டமாகத்தான், சில தினங்களுக்கு முன், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு, மாவட்ட பொறுப்பு இல்லை என்று கூறியதாக பிரச்சினை எழுந்தது. இதனால் கருணாநிதியிடம் துரைமுருகன் தன் வருத்தத்தை தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வு நடந்தது போல், இந்த உட்கட்சித் தேர்தலிலும் ஒரு கோஷ்டியின் ஆதிக்கத்தில், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால், திமுகவிலிருந்து உண்மையான விசுவாசிகள் பலர் ஒதுங்கவேண்டிய நிலை ஏற்படும்.

இதுகுறித்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி தரப்பை, பல்வேறு மாவட்டங்களின் மூத்த நிர்வாகிகள் தினமும் தொடர்பு கொண்டு, கட்சியின் நிலைமை குறித்து வருத்தப்படுவதாகவும், தலைமைக்கு புகார்கள் வருகின்றன.

அனைத்து விஷயங்களையும், கருணாநிதி மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார். எனவே, 2016 தேர்தலுக்கு முன் அவர் கட்சியில் மாற்றத்தை உருவாக்குவார் என்று நம்புகிறோம். ஸ்டாலினும் இதில் தலையிட்டு தலைவரின் வழிகாட்டுதல்படி, கோஷ்டிப் பிரச்சினைகளைத் தீர்ப்பார் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிருப்தி யாருக்கு?

திருவள்ளூர் சிவாஜி, வடசென்னை கே.பி.பி.சாமி, செங்கை சிவம், இரா.மதிவாணன், பலராமன், பாஸ்கரன், தென்சென்னை ஜெ.அன்பழகன், எஸ்.ஏ.எம்.உசேன், காஞ்சிபுரம் உக்கம்சந்த், வேலூர் முகமது சகி, விழுப்புரம் வேங்கடபதி, சேதுநாதன், ஆதிசங்கர், கடலூர் சபா.ராஜேந்திரன், தஞ்சை பழனி மாணிக்கம், திருவாரூர் பூண்டி கலைவாணன், நாகை மதிவாணன், வேலூர் கதிர் ஆனந்த், திருவண்ணாமலை கு.பிச்சாண்டி, தர், சேலம் வீரபாண்டி ராஜா, நாமக்கல் கே.பி.ராமலிங்கம், ஈரோடு முத்துசாமி, கோவை கண்ணப்பன், கரூர் கே.சி.பழனிச்சாமி, திருச்சி செல்வராஜ், சிவா, சிவகங்கை காசிநாதன், ஈரோடு சுப்புலட்சுமி ஜெகதீசன், குமரி புஷ்பலதா ஆல்பன், நீலகிரி முபாரக், கடலூர் இள.புகழேந்தி திண்டுக்கல் பஷீர் அகமது, நூர்ஜஹான், மதுரை தமிழரசி, சத்திரப்பட்டி சந்திரசேகர், வழக்கறிஞர் பழனிச்சாமி, சேடப்பட்டி முத்தையா, ராமநாதபுரம் பவானி ராஜேந்திரன், ரகுமான்கான், விருதுநகர் வி.பி.ராஜன், அமுதன், ரூசோ, திருநெல்வேலி ஆவுடையப்பன், தங்கவேலு, பூங்கோதை, மைதீன்கான், அப்பாவு, சுப.சீத்தாராமன், தூத்துக்குடி கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மனோதங்கராஜ், ஜெரால்டு, மகேஷ், எப்.எம்.ராஜரத்தினம், தூத்துக்குடி ஜெயதுரை, ஜெயசீலன் ஆகிய நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் பலர் உட்கட்சி தேர்தலில் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாக, திமுக தலைமைக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

யாருக்கு செல்வாக்கு?

தென்சென்னை மா.சுப்பிரமணியன், கு.க.செல்வம், வடசென்னை ஆர்.டி.சேகர், சேகர்பாபு, ரங்கநாதன், காஞ்சிபுரம் தா.மோ.அன்பரசன், திருவள்ளூர் சுதர்சனம், விழுப்புரம் பொன்முடி, கடலூர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தஞ்சை டி.ஆர்.பாலு, நாகை ஏ.கே.எஸ்.விஜயன், வேலூர் ராணிப்பேட்டை காந்தி, திருவண்ணாமலை எ.வ.வேலு, சேலம் உமாராணி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், செல்வகணபதி, தர்மபுரி சுகவனம், நாமக்கல் காந்தி செல்வன், வி.பி.துரைசாமி, ஈரோடு ராஜா, கோவை பொங்கலூர் பழனிச்சாமி, நீலகிரி ஆ.ராசா, பெரம்பலூர், அரியலூர் சிவசங்கர், சுப.சந்திரசேகர், திருச்சி கே.என்.நேரு, புதுக்கோட்டை ரகுபதி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மதுரை வேலுச்சாமி, தளபதி, மூர்த்தி, மேலமாசி வீதி சரவணன், எஸ்ஸார் கோபி, சிவகங்கை பெரியகருப்பன், விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தூத்துக்குடி என்.பெரியசாமி, கன்னியாகுமரி சுரேஷ்ராஜன், ராமநாதபுரம் சுப.தங்க வேலன், திருநெல்வேலி கருப்பசாமி பாண்டியன், துரைராஜ், புலவர் இந்திர குமாரி ஆகியோரது ஆதரவாளர்கள், திமுக உட்கட்சித் தேர்தலில் செல்வாக் குடன் உள்ளதாக திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அனைத்து விஷயங்களையும், கருணாநிதி மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார். எனவே, 2016 தேர்தலுக்கு முன் அவர் கட்சியில் மாற்றத்தை உருவாக்குவார் என்று நம்புகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

15 hours ago

மேலும்